தேசத்தை வளர்ப்பது என்பது என்றுமே ஒரு தலைமுறை அல்லது ஒரு கட்சியின் பொறுப்பாக மட்டும் இருந்ததில்லை என்று பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கூறியுள்ளார்.
தேசத்தை வளர்ப்பது என்பது தனிநபர்களின் முயற்சி, கூட்டு முயற்சி இரண்டும் கலந்தது என்று அவர் தமது தேசிய தினச் செய்தியில் கூறியுள்ளார்.
“சிங்கப்பூரின் வருங்காலத்தைச் செதுக்கும் சக்தி ஒவ்வொரு சிங்கப்பூரரிடமும் உள்ளது,” என்று தமது கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் திரு சிங் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) பதிவிட்டார்.
“பொதுமக்களின் கடமை என்பது நமது பொறுப்பு மட்டுமே,” என்று அவர் எடுத்துரைத்தார்.
60 ஆண்டுகளில் சிங்கப்பூர், தாராள மனது, நியாயமாக நடந்துகொள்ளும் உணர்வு, சம மரியாதைக்கு மிகுந்த மதிப்பு தருவது ஆகிய அம்சங்கள் கொண்ட சிங்கப்பூரர்களால் ஒற்றுமையான நாடாக உருவெடுத்துள்ளது என்று திரு சிங் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக இனம், மொழி, சமய வேறுபாடின்றி சிங்கப்பூரர்கள் அவ்வாறு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
60 வயதை அடையும் சிங்கப்பூருக்கு அதிக வயதாகவில்லை; அதேவேளை, இது இளம் நாடும் இல்லை என்று திரு சிங் சுட்டினார்.
மேலும், சிங்கப்பூரின் கதை இன்னும் அனைவராலும் எழுதப்பட்டுவருவதாக அவர் சொன்னார். தங்களின் எஞ்சிய காலத்தை இலக்குடனும் கண்ணியத்துடனும் வாழும் மூத்தோரிலிருந்து அரசாங்கத் துறை ஊழியர்கள், இளம் மாணவர்கள் உள்ளிட்டோர் வரை சிங்கப்பூரின் கதையைச் செதுக்குவதாக அவர் விளக்கினார்.
சிங்கப்பூரின் கதை, நமது முன்னோடிகள், பெற்றோர் இப்போது நாம் ஆகிய அனைவைரின் மீள்திறனை வெளிப்படுத்தும் ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், அந்த அம்சம்தான் சுதந்திரம் அடைதல், பொருளியல் சவால்கள், உலகளவில் காணப்பட்ட கொள்ளைநோய்ப் பரவல் நிகழ்வுகள் ஆகியவற்றைக் கையாண்டு முன்செல்ல சிங்கப்பூருக்கு வகைசெய்ததாக திரு சிங் குறிப்பிட்டார்.

