தேசிய தின அணிவகுப்பு இவ்வாண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
அது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடைய சிறப்பு நிகழ்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய விளையாட்டரங்கிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிகவும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காவல்துறை சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிட்ட அறிக்கையில் அதுகுறித்த விவரங்களை விளக்கியது. தேசிய விளையாட்டரங்கத்தைச் சுற்றியுள்ள வளாகம் சிறப்பு நிகழ்ச்சிக்கான இடமாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு பாதுகாப்பை கருத்தில்கொண்டு மேம்படுத்தப்பட்ட சோதனைகள் நடத்தப்படும்.
அந்தப் பகுதிக்கு வரும் அனைத்து மக்களையும் நுழையும் வாகனங்களையும் காவல்துறையினர் சோதனைகள் நடத்துவர். அங்கு அமைக்கப்படும் பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஒருவரை நுழையாமல் தடுக்கவும் அங்கிருந்து அப்புறப்படுத்தவும் காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று அது குறிப்பிட்டது.
தேசிய தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று நாள் முழுவதும் அந்த மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு செயல்பாடுகளின் அங்கமாக தேசிய விளையாட்டரங்குக்கு வருகை தருவோர் அனைவரும் அவர்களின் முகங்களை முகமூடிகளால் அல்லது இதர கவசங்களால் மறைத்திருந்தால் அவற்றை தற்காலிகமாக அகற்ற வேண்டும்.
இந்த விதிமுறைகளுக்கான அறிவிப்புகள் சோதனைகள் நடக்கும் பகுதிகளை பொதுமக்கள் நெருங்கும் பாதைகளில் வைக்கப்பட்டிருக்கும். வருகையாளர்களுக்கு உதவிட அங்கு அதிகாரிகள் பணியில் இருப்பர் என்று காவல்துறை தெரிவித்தது.
அவ்வாறு பொதுவெளியில் முகமூடிகளை அகற்ற விரும்பாதோர் தனிப்பட்ட மறைவிடங்களுக்கு சென்று அவற்றை அகற்றுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறலாம்.

