இந்திய முஸ்லிம் பேரவை, ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் இணைந்து தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சியை ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்தியது. தொடக்கமாக, மாணவி ஃபாத்திமா ஜுனைரா திருக்குர்ஆன் வசனங்களை ஓதி அதன் பொருளையும் வாசித்தார்.பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகக் குழு தலைவரும் மூத்த சமூக அடித்தளத் தலைவருமான ஹாஜி முஹம்மது ரஃபீக், தேசிய தினப் பற்றுறுதியை வழிநடத்தினார். ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் அஹமது ஜலாலுத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமையுரை ஆற்றிய இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் அ. முஹம்மது பிலால், சிங்கப்பூரில் நல்லிணக்கம் சிறப்பாக பேணப்பட்டு வந்தாலும் வெளிநாடுகளில் இருந்து வரும் தீவிரவாதச் சிந்தனைகள் நம் நல்லிணக்கத்தை வேரறுக்க முயல்கிறது. அதற்கு நாம் இடம் கொடுக்காமல் கவனமாகச் செயலாற்ற வேண்டும் என்றும் நம் மாணவர்கள் இளையர்களையும் தீவிரவாதச் சிந்தனை வலையில் அகப்படாமல் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல மனநல மருத்துவருமான டாக்டர் சையத் ஹாரூன் அல்ஹப்ஷி, இருவேறு அமைப்புகளான இந்திய முஸ்லிம் பேரவையும், ஜாமிஆ சூலியா பள்ளிவாசலும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியதைப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டதையும் வரவேற்ற அவர், பிரதமர் லாரன்ஸ் வோங் நிகழ்த்திய தேசிய தின உரையின் சாராம்சத்தையும் பகிர்ந்து கொண்டார். முன்னதாக சிறப்பு விருந்தினருக்கும் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மூத்த சமூக அடித்தளத் தலைவரும் சமாதான நீதிபதியுமான நசீர் கனிக்கும் சிறப்புச் செய்யப்பட்டது.
மாணவர்கள், பெண்கள், இணை மற்றும் சகோதர அமைப்பினர் என சுமார் 180 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். செய்தி: இந்திய முஸ்லிம் பேரவை

