சிங்கப்பூரில் வழக்கமாக ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில்தான் டெங்கிப் பரவல் அதிகமாக இருக்கும்.
இதனால் சமூக அளவில் அனைவரும் ஒன்றுபட்டு டெங்கியைத் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் டெங்கி பாதிப்பை சரிவர நிர்வகிக்க மே 25ஆம் தேதி தேசிய டெங்கித் தடுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. பாசிர் ரிஸ் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் டாக்டர் ஜனில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
புதிய அமைச்சரவையில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு டாக்டர் ஜனில் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சியாகும்.
“பல ஆண்டுகளாக டெங்கியைத் தடுப்பதில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதால் சமூக அளவில் நமது நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளது. இதனால் டெங்கி ஒரு தீவிர நோயாக மாறுகிறது,” என்றார் அவர்.
அவருடன் பாசிர் ரிஸ் - சாங்கியின் அடித்தள ஆலோசகர் டெஸ்மண்ட் டானும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
“டெங்கியைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் தனிப்பட்ட அளவில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்,” என்றார் திரு டான்.
2023ஆம் ஆண்டில் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் கொசு இனப்பெருக்கம் அதிகமிருந்த 90 இடங்களை தேசியச் சுற்றுப்புற அமைப்பு கண்டறிந்தது. அவற்றில் 62 இடங்கள் வீடுகளில் இருந்ததாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
டெங்கி மட்டுமன்றி ஸிக்கா நோய்ப் பரவலையும் கட்டுப்படுத்த தேசியச் சுற்றுப்புற வாரியம் தொடர்ந்து B-L-O-C-K வழிமுறையைப் பின்பற்ற வலியுறுத்துகிறது. இந்த வழிமுறை வீட்டில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றி, கொசுக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்கும்.
தனிப்பட்ட அளவில் கொசுக்களின் தாக்கத்தை குறைக்க S-A-W வழிமுறை ஊக்குவிக்கப்படுகிறது. வீட்டின் இருட்டான மூலைகளில் பூச்சிக்கொல்லி தெளிப்பது, பூச்சிகளை விரட்டும் மருந்தை பூசிக்கொள்வது, முழுக்கைச் சட்டை, முழுக்கால் சட்டை அணிவது போன்றவை உதவும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.