‘ஷாப்பி’ எனும் இணைய பொருள் வாங்கும் தளம், தேசிய தின அணிவகுப்பு 2025 ஏற்பாட்டுக் குழு ஆகியவற்றுக்கு இடையிலான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இங்குள்ள குடும்பங்கள் இப்போது தலா ஓர் தேசியக் கொடியை இலவசபாகப் பெற்றுக்கொள்ளலாம்.
‘நமது கொடியைப் பறக்கவிடுங்கள்’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, ஜூலை 15ஆம் தேதி காலை 11.59 மணி வரை அல்லது கையிருப்பு உள்ள வரை நீடிக்கும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 27) ஒரு செய்தியறிக்கையில் தெரிவித்தது.
கொடியைப் பெற்றுக்கொள்ள, https://shopee.sg/ndp-2025-flyourflag எனும் இணையப் பக்கத்துக்குச் சென்று, சிங்பாசுடன் உள்நுழைந்து, கொடியை ஒரு விலை கொடுத்து, வீட்டுக்கு விநியோகிக்கும் தெரிவைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஒரு சேகரிப்பு மையத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
“இந்த நடவடிக்கை, குடும்பங்கள் ஒன்றுகூடி, நாம் பகிர்ந்துகொள்ளும் அடையாளம், தேசிய பெருமை ஆகியவற்றின் அடையாளமாக கொடியைப் பெருமையுடன் காட்சிப்படுத்துவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அமைச்சு கூறியது.
ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான தேசிய தினக் கொண்டாட்டக் காலத்தில் சிங்கப்பூரர்கள் தேசியக் கொடியைப் பறக்கவிட ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சு கூறியது.
இந்தக் காலகட்டத்தில், கொடியைப் பறக்கவிடுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் விதிகள் தளர்த்தப்படும். கொடிக்கம்பம் இல்லாமல் கொடியைப் பறக்கவிடலாம். இரவில் கொடியின் மீது விளக்கொளி பட வைக்க வேண்டியதில்லை. அலுவலகங்கள், கட்டடங்கள், குடியிருப்பு வளாகங்களில் கொடியை ஏற்றலாம்.
தேசியக் கொடிக்குக் கொடுக்கப்படும் மரியாதை எப்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மேலும் கிழிந்த அல்லது மக்கிப் போன கொடிகளைக் காட்சிப்படுத்தக்கூடாது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.