உயர் மதிப்புடைய தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்கவும் நிறுவன உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி இயந்திரங்களை முன்னெடுத்துச் செல்வதில் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும் $3 பில்லியன் நிதியை வழங்கக் கடப்பாடு கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய உற்பத்தித்திறன் நிதிக்கு நிரப்பப்படும் இந்தத் தொகை, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல் உள்ளிட்ட புதிய அம்சங்களில் சிங்கப்பூர் போட்டியிட உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
“அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறை, நாட்டின் இயக்கத்தன்மையையும் புத்தாக்கத்தையும் முன்னெடுத்துச் செல்ல உதவியுள்ளது,” என்றார் அவர்.
அமெரிக்காவைப் போன்ற அதே அளவில் சிங்கப்பூர் இயங்காமல் இருக்கலாம். ஆனால், அதுவும் உன்னதமடைய முடியும்.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் பொருளியல் 4 விழுக்காட்டுக்குமேல் வளர்ச்சி அடைந்தாலும், உலகளாவிய போட்டி தீவிரமடைந்துவரும் வேளையில் சிங்கப்பூரால் இப்படியே இருந்துவிட முடியாது என்றும் மதிப்பைப் பெற்றுத் தந்து, உள்ளூர் சேவைகள் தனித்து நிற்க உதவும் நடவடிக்கைகளில் அது கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரு வோங் கூறினார்.
ஒன் நார்த்தின் புதிய ஆய்வு, மேம்பாட்டு வசதியைப் புதுப்பிக்க ஏறக்குறைய $1 பில்லியன் செலவிடப்படும். ஏற்கெனவே உள்ள திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம் இதர பங்குதாரர்களுடன் சேர்ந்து ஆய்வு, மேம்பாட்டு, புத்தாக்க முயற்சிகளை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று பிரதமர் கூறினார்.
ஒன் நார்த் பகுதியில் பொது உயிர் அறிவியல், மருத்துவத் தொழில்நுட்ப ஆய்வு உள்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் புதுப்பிக்கவுள்ளது.
இது அதிநவீன வசதிகளை வழங்குவதோடு, ஆய்வுச் சமூகத்தினுள் ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் செய்யும்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கம் புதிய தேசிய பகுதிமின்கடத்தி ஆய்வு, மேம்பாட்டு வசதியை ஏற்படுத்தும். ஆய்வாளர்களும் தொழில்துறைப் பங்காளிகளும் புதிய பகுதிமின்கடத்தி புத்தாக்கங்களைச் சோதித்துப் பார்க்க தொழில்துறை தரம்வாய்ந்த கருவிகளை இது வழங்கும் என்றார் பிரதமர் வோங்.

