சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த சேவையாளர் ஒருவர் ஹெண்டன் முகாமில் உள்ள நீச்சல் குளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை சுயநினைவின்றி காணப்பட்டார்.
காலை 7.15 மணியளவில் நீச்சல் குளத்தில் காணப்பட்ட அவர் அங்குத் தனியாகப் பயிற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது என்று தற்காப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
சம்பவ இடத்தில் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தற்காப்பு அமைச்சு சொன்னது.
சிங்கப்பூர்க் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அந்தச் சேவையாளர் பின் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மருத்துவமனைக்குச் செல்கின்ற வழியிலும் மருத்துவமனையிலும் ஆடவரைச் சுவாசிக்க வைக்கும் முயற்சிகள் தொடர்ந்தன. இருப்பினும் காலை 7.44 மணியளவில் அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
உயிரிழந்த சேவையாளரின் குடும்பத்துக்குத் தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டன.
துக்கமான இந்தத் தருணத்தில் சேவையாளரின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளையும் அவை செய்கின்றன.