சிங்கப்பூர் பல இனங்களையும் பல சமயங்களையும் கொண்ட பரஸ்பர மரியாதை உள்ள நாடு. சிங்கப்பூர், அனைத்து சிங்கப்பூரர்களுக்குமானது.
1966ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவை அனைத்து தலைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் மூத்த அமைச்சர் கா. சண்முகம்.
தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம், சோங் பாங் வட்டாரத்தில் நடைபெற்ற தேசிய தின விருந்தில் கலந்துகொண்டார்.
அதில், தேசிய உறுதிமொழியின் 60ஆம் ஆண்டு நிறைவு அனுசரிக்கப்பட்டது.
பல இனம், பல சமயம், பல வயதினர் எனக் கிட்டத்தட்ட 1,600 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டின் உறுதிமொழியை நான்கு அதிகாரபூர்வ மொழிகளிலும் கூறினர்.
நிகழ்ச்சி குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட திரு சண்முகம், தேசிய உறுதிமொழியைத் தமிழில் கூறியதையும் பகிர்ந்துகொண்டார்.
உறுதிமொழியின் வார்த்தைகளுக்குப் பின்னால் ஒரு வரலாறு உண்டு என்ற அவர், 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் தனி நாடானது என்றும் 1966ஆம் ஆண்டு உறுதிமொழி குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.
ராஃபிள்ஸ் பள்ளியின் முதல்வரான திரு ஃபிலிப் லியாவ், உறுதிமொழியின் முதல் வரைவை வரைந்தார். திரு எஸ். ராஜரத்னம் கூடுதலான அதை வடிவமைத்தார்.
“நாம் உச்சரிக்கும் உறுதிமொழி நான்காவது முறை மாற்றப்பட்டது. 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரின் அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது.
அந்த உறுதிமொழியின் வார்த்தைகள் கவனத்துடன் தேர்வுசெய்யப்பட்டன என்ற திரு சண்முகம், “...இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபட்டு…” என்ற வரியைச் சுட்டினார்.
1960களில் அது மிகவும் சக்திவாய்ந்த கூற்று என்று திரு சண்முகம் வலியுறுத்தினார்.


