தேசிய சுற்றுப்புற வாரியம் அன்றாட புகைமூட்ட ஆலோசனை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. புகைமூட்ட நிலவரம் மேம்பட்டிருப்பதும் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டிருப்பதுமே இதற்குக் காரணம்.
இவ்வாண்டின் எஞ்சிய காலகட்டத்திற்கு எல்லைத் தாண்டிய புகைமூட்டம் சிங்கப்பூரைப் பாதிக்கும் சாத்தியம் குறைவு என்று வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
தென்கிழக்காசியாவின் தெற்கு வட்டாரத்திற்கான புகைமூட்ட எச்சரிக்கை நிலையை ஆசியான் நிபுணத்துவ வானிலை நிலையம் குறைத்திருப்பதை அது சுட்டியது.
எச்சரிக்கை நிலை இரண்டாம் நிலையிலிருந்து ஒன்றாம் நிலைக்குக் கீழ்நோக்கித் திருத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை என்பது அந்த வட்டாரத்தில் எல்லைத் தாண்டிய புகைமூட்டம் நிலவும் சாத்தியத்தைக் குறிக்கிறது. ஒன்றாம் நிலை, வறண்ட பருவக்காலத்தைக் குறிக்கிறது.
அந்த வட்டாரத்தில் வரும் வாரங்களில் ஈரமான வானிலையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் அன்றாட ஆலோசனை வெளியிடுவது மீண்டும் தொடங்கப்படும் என்றும் வாரியம் கூறியது.
அக்டோபர் 7ஆம் தேதி அன்றாட புகைமூட்ட ஆலோசனையை வாரியம் வெளியிடத் தொடங்கியது. அப்போது சிங்கப்பூரின் காற்றுத்தரம் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.