கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 1,900 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. இதில் ஐந்து வேலை நிறுத்த உத்தரவுகளும், 274 அபராத விதிப்புகளும் அடங்கும்.
மேலும் ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கு இடையில் கிட்டத்தட்ட $400,000க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.
கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, கடல்சார் துறைகளில் உள்ள நிறுவனங்களில் 900க்கும் மேற்பட்ட ஆய்வுகள் இந்த மூன்று மாத காலத்தில் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில் பணியிடங்களில் இயந்திரங்கள், வாகனப் பாதுகாப்பு குறித்து கவனமாக ஆய்வு செய்யப்பட்டது என மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
‘ஃபோர்க் லிப்ட்’ பாரந்தூக்கியை கவனிக்காமல் இயக்குவது, ‘ஃபோர்க்லிஃப்ட்’ பாரம்தூக்கியை இயக்குபவர்கள் அதை இயக்கும்போது தங்கள் இருக்கை வாரை அணியத் தவறியது போன்றவை மனிதவள அமைச்சு ஆய்வுகளின்போது கண்டறியப்பட்ட சில பொதுவான பாதுகாப்பு விதி மீறல்கள் ஆகும்.
அத்துடன் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தின் கதவுகளைத் திறப்பதால் தொழிலாளர்கள் உயரத்தில் இருந்து விழும் அபாயங்கள் ஏற்படுகின்றன எனவும் அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 16 பேர் பணியிட விபத்துகளில் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

