மூத்தோர் துடிப்புடன் மூப்படைவதற்கு ஏதுவாக மேலும் பல திட்டங்களையும் வலுவான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் கொண்டுவர முடியும் என்று நீ சூன் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணியில் புதுமுக வேட்பாளராகக் களம் காணும் ஜாக்சன் லாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பூச்சிக் கட்டுப்பாடு, துப்புரவு நிறுவனமொன்றின் தலைவரான திரு லாம், இப்போதைய சூழலில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொண்டுவரும் சவால்களைப் பற்றித் தாம் அறிந்துள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து, தாம் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவுமிக்க சூழலை ஏற்படுத்தித் தர உதவ விரும்புவதாகக் கூறியுள்ளார்.
ஈசூன் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) இரவு நீ சூன் குழுத்தொகுதி மசெக அணியின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.
அதில் முதலாவதாக உரையாற்றிய திரு லாம், “மூத்த குடிமக்கள், மாணவர்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் என அனைவருக்கும் நாங்கள் இருக்கிறோம், நான் இருக்கிறேன்,” என்றார், கடந்த 30 ஆண்டுகளாக நீ சூன் குடியிருப்பாளராக இருந்துவரும் திரு லாம்.
இன்னொரு புதுமுக வேட்பாளரான திருவாட்டி லீ ஹுய் யிங், மூத்தோர் நன்றாக வாழவும் துடிப்புடன் நடமாடவும், குடும்பங்கள் செழிக்கவும், இளையர்கள் அச்சமின்றித் தங்கள் கனவை நனவாக்கவும் உகந்த இல்லமாக நீ சூனை உருவாக்க நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார்.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தலைமையிலான நீ சூன் குழுத்தொகுதி அணியில் டாக்டர் சையது ஹருன் அல்ஹப்ஷி, திருவாட்டி கோ ஹன்யான் என மேலும் இரு புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.
“ஈசூன் குடியிருப்பாளர்கள் எவரும் கைவிடப்பட மாட்டார்கள் என்று மசெக மறுவுறுதியளிக்கிறது. நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்,” என்றார் டாக்டர் சையது ஹருன்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதுள்ள திட்டங்கள் தொடரும் என்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த புதிய வழிகளை ஆராய்வோம் என்றும் உறுதியளித்தார் திருவாட்டி கோ.
நீ சூன் குழுத்தொகுதியில் திரு ரவி ஃபிலமன் தலைமையிலான ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி அணி, மசெக அணியை எதிர்த்துக் களமிறங்கியுள்ளது.