குளிரூட்டப்பட்ட அறைகள், பொதுவான உணவருந்தும் இடம், சமையல் அறை, விளையாட்டு அறை உட்பட பல்வேறு வசதிகளுடன் பேருந்து ஓட்டுநர்களுக்காகவே புதிய தங்குவிடுதி, முக்கியமாக வேலை செய்யும் பணிமனைக்கு பக்கத்திலேயே முதல் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுவனமான ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ திங்கட்கிழமை (ஜூன் 29) அன்று இந்த எட்டு மாடிக் கட்டடமான தங்கும் விடுதியைத் திறந்து வைத்துள்ளது.
பெரும்பாலான ஓட்டுநர்கள் அருகில் உள்ள செங்காங் வெஸ்ட் பணிமனையில் வேலை செய்வதால் அவர்கள் வேலைக்குச் சென்று திரும்புவதற்கு வசதியாக இருக்கும்.
எஸ்கியூ@செங்காங் வெஸ்ட் என்று தங்குவிடுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் இதில் தங்க வைக்கப்படவுள்ளனர். ஏற்கெனவே 200க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இங்கு குடியேறிவிட்டனர்.
வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் தங்குமிடம் ஓட்டுநர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இருப்பினும், மின்சாரம், தண்ணீர் போன்ற பொதுப் பயனீட்டுக் கட்டணங்களை ஓட்டுநர்களே செலுத்த வேண்டும்.
இந்த விடுதியில் உள்ள 39 வீடுகளில் மொத்தம் 234 படுக்கைகள் உள்ளன. ஒவ்வொரு வீடுகளிலும் மூன்று படுக்கையறைகள் உள்ளன.
ஒவ்வொரு படுக்கை அறையிலும் இரு படுக்கைகள் இருப்பதால் அதில் இரண்டு பேர் தங்க முடியும். ஓட்டுநர்களுக்குப் பொதுவான உணவுக்கூடம், சமையலறை, துணி துவைக்கும் வசதிகளும் இருக்கிறது.
பெண் பேருந்து ஓட்டுநர்களுக்காக ஒரு முழு தளம் ஒதுக்கப்பட்டுள்ளது.
படுக்கையறைகளில் குளிரூட்டி, மின்விசிறிகளுடன் அலமாரிகளும் இருக்கின்றன.
சமையலறைகளில் அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி, சமையல் பாத்திரங்கள், தட்டுகளும் துணி துவைக்கும் இடங்களில் சலவை இயந்திரம், காயவைக்கும் சாதனம், துணி உலர்த்தும் கம்பிகளும் வைக்கப்பட்டுள்ளன.
கேரம், மேசைப் பந்து போன்ற விளையாட்டுகளுக்காக பல்நோக்கு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மளிகைப் பொருள்களை தருவிக்கும் சேவையும் இங்கு வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த வளாகத்திற்குள் மது அருந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவிக்காக சக்கர நாற்காலி வசதியுடன்கூடிய அவசர சிகிச்சை அறையும் இங்கு உள்ளது.
இந்த விடுதியை ‘கோலிவூ’ என்ற தங்குமிட நிர்வாக நிறுவனம் நிர்வகிக்கிறது
நிலப் போக்குவரத்து ஆணையம், பேருந்து பணிமனையுடன் இணைந்து இந்தக் கட்டடத்தைக் கட்டியிருக்கிறது.
“பேருந்து ஓட்டுநர்களின் கருத்துகளைக் கேட்டு, அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி சிம் தெரிவித்துள்ளார்.

