வரும் ஜூன் மாதத்துக்குள் தோபாயோ, தெம்பனிஸ், வாம்போ வட்டாரங்களில் மூன்று புதிய பொதுப் பேருந்துச் சேவைகள் அறிமுகம் காணும்.
போக்குவரத்து முனையங்கள், அத்தியாவசியக் சேவைகள் மற்றும் பொருள்களை வழங்கும் இடங்கள் ஆகியவற்றைப் பொதுமக்கள் மேலும் எளிதில் சென்றடைய வகைசெய்வது இலக்கு.
பொதுப் பேருந்துச் சேவைத் தொடர்புகளை மேம்படுத்த சென்ற ஆண்டு ஜூலை மாதம் 900 மில்லியன் வெள்ளி மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டது. அதன்கீழ் புதிய பேருந்துச் சேவைகள் தொடங்கப்படுகின்றன.
இம்மாதம் 27ஆம் தேதி முதல் பேருந்துச் சேவை 299, தெம்பனிஸ் நார்த் பேருந்து முனையத்துக்கும் தேம்பனிஸ் ஸ்திரீட் 96க்கும் இடையே சேவை வழங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அறிக்கையில் தெரிவித்தது.
பேருந்துச் சேவை 299, தெம்பனிஸ் சவுத் போன்ற புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்பு வட்டாரங்களின் குடியிருப்பாளர்களுக்குப் பலனளிக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட், திங்கட்கிழமையன்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
மற்றொரு புதிய பேருந்துச் சேவையான 21X, இம்மாதம் 28ஆம் தேதியிலிருந்து வாம்போவுக்கும் நொவீனாவுக்கும் இடையே பயணம் செய்யும். 21X, நொவீனா பெருவிரைவு ரயில் நிலையத்தை மேலும் வேகமாகச் சென்றடைய வாம்போ வட்டாரவாசிகளுக்கு உதவும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
‘லூப் சர்விஸ்’ (Loop Service) என்றழைக்கப்படும், தொடங்கிய இடத்திலிருந்து புறப்பட்டு பயணப் பாதையைச் சுற்றிவந்து அதே இடத்தில் முடியும் பேருந்துச் சேவையான 21X, செயின்ட் மைக்கல்ஸ் பேருந்து முனையத்திலிருந்து புறப்படும்.
தற்போது நடப்பில் இருக்கும் சேவை எண் 21உடன் சேர்ந்து 21X வழங்கப்படும். குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே நிற்கவுள்ள 21X, வார நாள்களில் காலை, மாலை உச்சநேரங்களில் இயங்கும். வார இறுதியிலும் பொது விடுமுறை நாள்களிலும் இச்சேவை இயங்காது.
தொடர்புடைய செய்திகள்
299, 21X இரண்டையும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இயக்கும்.
மூன்றாவது புதிய பேருந்துச் சேவையான 230M, கிம் கியட் அவென்யூவில் வசிப்போரை தோபாயோ பேருந்து முனையம், பெருவிரைவு ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் தொடங்கப்படுகிறது.
தோபாயோ வட்டாரத்தில் வேறு சில பேருந்துச் சேவைகள் செல்லும் பாதைகளில் வரும் ஜூன் மாதத்துக்குள் மாற்றங்கள் செய்யப்படும்; கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் 230M தொடங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இதுகுறித்த மேல்விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையம் கூறியது.