சிங்கப்பூரில் மாதவிடாய் நிறுத்தத்தால் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவ புதிய வழிகாட்டிகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பலதுறை மருந்தகங்கள், பொது மருந்தகங்கள், சமூக மருந்தகங்களில் உள்ள தாதிகள் என மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு வழங்குவோருக்குக் கைகொடுக்க வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சு, வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் மூத்த துணையமைச்சர் சிம் ஆன் வழிகாட்டியை வெளியிட்டார்.
கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையில் நடைபெற்ற அனைத்துலகக் கூட்டம் ஒன்றின் தொடக்கத்தில் திருவாட்டி சிம் ஆன் பேசினார்.
மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் கூடுதல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும் என்றும் சரியான சிகிச்சைகள் உண்டு என்றும் திருவாட்டி சிம் ஆன் சொன்னார்.
கடந்த ஆண்டு கே.கே மருத்துவமனை, 45லிருந்து 65 வயதுக்கு உட்பட்ட 1,500 பெண்களிடம் நடத்திய ஆய்வைச் சுட்டிய திருவாட்டி சிம் ஆன், மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்ளும் பத்திலிருந்து ஏழு பெண்கள் மிதமான அறிகுறிகளிலிருந்து கடுமையான அறிகுறிகள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டனர் என்றார்.
அப்படியிருந்தும் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் மருத்துவ உதவியை நாடவில்லை.
மருத்துவ வழிகாட்டிகளுக்கு அப்பால் மனநிலை மாற்றம் தேவை என்று வலியுறுத்திய திருவாட்டி சிம் ஆன், மாதவிடாய் நிறுத்தம் குறித்து பெண்கள், குடும்பங்கள், நண்பர்கள் ஆகிய வெவ்வேறு வட்டங்களில் பேசவேண்டும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்வோரிடையே தசை வலி, தூக்கமின்மை, உடல்நலக் குறைவு, மனச்சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படுகிறது.

