2026இல் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மாற்றங்கள்

2026இல் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மாற்றங்கள்

2 mins read
46b86d88-a1ee-44d2-850d-42eed8570dbb
சிங்கப்பூரில் இவ்வாண்டு குறைந்தது 21 விழுக்காடினர் 65க்கும் அதிகமான வயதுடையவர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் இவ்வாண்டு மூத்தோருக்கும் மனநலப் பராமரிப்புக்கும் கூடுதல் ஆதரவை எதிர்பார்க்கலாம்.

பராமரிப்பு வசதிகளுடன் மூத்தோருக்கு ஏற்ற 200 சமூகப் பராமரிப்பு வீடுகள், தோ பாயோவில் உள்ள கால்டிகோட் ரயில் நிலையத்திற்கு அருகே உருவாக்கப்படவிருக்கின்றன. அங்கு வசிக்கும் கால்வாசி குடியிருப்பாளர்களின் வயது 65க்கும் அதிகமாக இருக்கும்.

சிங்கப்பூரில் இவ்வாண்டு குறைந்தது 21 விழுக்காட்டினர் 65க்கும் அதிக வயதுடையவர்களாக இருப்பர். 2030ஆம் ஆண்டுக்குள் குறைந்தது அரை விழுக்காட்டுக்கும் மேல் உள்ளோரின் வயது 65ஆக இருக்கும் என்று சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து புதிய ஒருங்கிணைந்த ‌ஷீல்ட் திட்ட சந்தாதாரர்கள் அடிப்படைக் கட்டணங்களுக்குத் திட்டத்தைப் பயன்படுத்த முடியாது. அதனால் சந்தாதாரர்கள் மருத்துவக் கட்டணங்களின் பெரும்பகுதியைக் கட்ட நேரிடலாம்.

அதிகரிக்கும் காப்புறுதிச் சந்தாக்களையும் தனியார் மருத்துவப் பராமரிப்புக் கட்டணங்களையும் கட்டுப்படுத்த புதிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

புதிய ‘ரைடர்க்’கான சந்தாக்கள் தற்போதைய சந்தாவைவிட 30 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நீண்டகால பராமரிப்புக் காப்புறுதியான ‘கேர்ஷீல்ட் லைஃப்’ திட்டத்தின்கீழ் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து கூடுதல் மாதாந்திர வழங்குதொகை கொடுக்கப்படும்.

திட்டத்தின் மாதாந்திர வழங்குதொகை ஆண்டுக்கு 4 விழுக்காடு வளர்ச்சிக் காணும். திட்டத்துக்கான மாதாந்திரச் சந்தா உயர்ந்தாலும் அடுத்த ஐந்தாண்டுக்கு அரசாங்கம் $570 மில்லியன் கூடுதல் சந்தா ஆதரவு வழங்கும்.

இவ்வாண்டிலிருந்து மனநலத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தின்கீழ், பொது மருந்தகங்களில் பதற்றம், மனஉளைச்சல் ஆகியவற்றுக்கும் சிகிச்சை வழங்கப்படும்.

லேசான அல்லது மிதமான மனநலப் பிரச்சினை உள்ளோரை மனநலக் கழகத்திற்கு அனுப்புவதற்குப் பதிலாக, சமூகச் சேவை அமைப்புகள் நோயாளிகளைப் பொது மருந்தகத்திடம் அனுப்பி வைக்கலாம்.

2024ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி 520க்கும் அதிகமான பொது மருந்தகங்கள், மனநல சுகாதாரப் பொது மருந்தகப் பங்காளித்துவத் திட்டத்தில் இணைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
சுகாதாரம்பராமரிப்புமூத்தோர்மனநலம்