காட்டுப் பகுதிகளை மறுசீரமைப்பது முதல் கடல்களைப் பாதுகாப்பது வரை, இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெறும் கொடை ஊக்குவிப்புக் கருத்தரங்கின்போது அறிமுகப்படுத்தப்படும் திட்டத்தின்கீழ் அது அறிவிக்கப்படும்.
தெமாசெக் டிரஸ்ட் ஆதரவிலான ‘கொடை ஊக்குவிப்பு ஆசியா கூட்டணியின் சமூகங்களுக்கான புதிய திட்டத்தில் ‘சமூகங்கள்’ என்ற இயற்கை கருப்பொருளிலான இரண்டு பிரிவுகள் அடங்கும்.
‘நீலப் பெருங்கடல்’ சமூகம் ஆசியாவில் உள்ள பெருங்கடல்களையும் கடல்சார் வளங்களையும் பாதுகாப்பதிலும் அவற்றின் நீடித்த பயன்பாட்டிலும் கவனம் செலுத்தும்.
‘நீடித்த நிலப் பயன்பாடு’ சமூகம், நீடித்து நிலைக்கக்கூடிய வேளாண்மை, நிலப் பாதுகாப்பு, பல்லுயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கும்.
மூன்றாவது சமூகம், முழுமையான, அனைவரையும் உள்ளடக்கும் கல்வியில் கவனம் செலுத்தும்.
வெவ்வேறு கருப்பொருள்களின்கீழ் உள்ள திட்டங்களுக்கு நிதி வழங்க விரும்பும் கூட்டணி உறுப்பினர்கள் இடையே ஒருங்கிணைப்புக்கான தளங்களாக இந்தச் சமூகங்கள் செயல்படும்.
இந்தச் சமூகங்களில் சேரும் உறுப்பினர்கள் ஒரே குறிக்கோளை நோக்கி, தங்களின் அறிவாற்றல், வளங்கள், மூலதனம் ஆகியவற்றை பகிர்ந்துகொள்வார்கள்.
மரினா பே சாண்ட்சில் ஏப்ரல் 15 முதல் 18 வரை நடைபெறும் ‘கொடை ஊக்குவிப்பு ஆசியா மாநாட்டில்’ அந்த மூன்று சமூகங்களும் அறிமுகப்படுத்தப்படும்.
‘டாலியோ ஃபிலந்துரோப்பிஸ், ‘சாவ் பாவ் சீ’ குடும்பத் தொழில் ஆகியவை ‘நீலப் பெருங்கடல்’க்கான சமூக முன்னோடிகள்.
‘கோல்டன் ஃபிலந்துரோப்பிஸ்’, ‘ஜோலிபீ’ குழும அறநிறுவனம் ஆகியவை ‘நீடித்த நிலப் பயன்பாடு’ சமூகத்தை வழிநடத்துகின்றன. ‘
‘டானோட்டோ’ அறநிறுவனம், ‘முழுமையான, அனைவரையும் உள்ளடக்கும் கல்வி’ என்ற சமூகத்தின் முன்னோடியாகும்.