சிங்கப்பூர், அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது. புதிய கல்விக் கழகம், $66 மில்லியன் கூடுதல் நிதி, விரிவான ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் அணுசக்தியின் நம்பகத்தன்மையை சிங்கப்பூர் இன்னும் சிறப்பான முறையில் மதிப்பிட முற்படுகிறது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 11ஆம் தேதி சிங்கப்பூர் அணுசக்தி ஆராய்ச்சி, பாதுகாப்புக் கழகம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
இதற்குமுன் இருந்த சிங்கப்பூர் அணுசக்தி ஆராய்ச்சி, பாதுகாப்பு திட்டத்துக்குத் தனி கட்டடம் இல்லை. சிங்கப்பூர் தேசியப் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப நிறுவனக் கட்டடத்தில் அது செயல்பட்டது.
அணுசக்தி அறிவியல், பொறியியல் ஆகியவை தொடர்பான துறைகளில் முதுநிலைக் கல்வியைத் தொடர 30க்கும் மேற்பட்ட உபகாரச் சம்பளங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
கரிம வெளியேற்றம் இல்லாத அணுசக்திமீது அனைத்துலக ரீதியில் ஆர்வம் அதிகரித்துவரும் நிலையில் புதிய அணுசக்தித் தொழில்நுட்பங்கள், அணுசக்தி கொள்கைகள் ஆகியவை மீதான ஆய்வைப் புதிய கழகம் தீவிரிவுபடுத்துவதோடு அணுசக்தி பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வையும் மேம்படுத்த முயலும்.
சிங்கப்பூரின் தேசிய ஆராய்ச்சி அறநிறுவனம் வழங்கிய $66 மில்லியன் மானியம் ஐந்து அம்சங்களில் ஆராய்ச்சியை விரிவுபடுத்த சிங்கப்பூர் அணுசக்தி ஆராய்ச்சி, பாதுகாப்புக் கழகம் உதவும்.
அவற்றுள், பாதுகாப்பு, அணுசக்தி கொள்கை, கதிரியக்க துகள்களைச் சிதைத்தல், உயிருள்ள பொருள்கள்மீதான கதிரியக்க தாக்கம் ஆகியவை அடங்கும்.
அந்தக் கூடுதல் மானியம் தேசிய ஆராய்ச்சி அறநிறுவனத்தின் ஆராய்ச்சி, புத்தாக்க நிறுவனம் 2025 திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது. டிசம்பர் 2024 தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
பிரின்ஸ் ஜார்ஜ் பார்க்கில் கட்டப்பட்ட ஐந்து மாடி கட்டடத்தில் புதிய சிங்கப்பூர் அணுசக்தி ஆராய்ச்சி, பாதுகாப்புக் கழகம் அமைந்துள்ளது.
அதிகளவில் கதிரியக்க நடவடிக்கைகளும் கதிரியக்கத்தை வெளியேற்றும் உபகரணங்களும் கட்டடத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
எனினும் இயற்கை எரிசக்தி குறைவாக இருப்பதால் குறைந்த கரிமத்தை வெளியேற்றும் பல தெரிவுகளில் அணுசக்தியும் ஒன்றாகக் கருதப்படுகிறது.