காத்திப்பில் மே 13ஆம் தேதி புதிய பலதுறை மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. அது அவ்வட்டாரத்தில் வசிக்கும் 80,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பலதுறை மருந்தகம் காத்திப் ரயில் நிலையத்திற்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.
காத்திப் பலதுறை மருந்தகம் சிங்கப்பூரின் 26ஆவது பலதுறை மருந்தகம் ஆகும்.
சிங்கப்பூரின் சுகாதாரக் கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கையாக புதிய பலதுறை மருந்தகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் சுகாதார மேம்பாட்டுக்கும் நோய்த் தடுப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அதிக அளவில் பலதுறை மருந்தகங்கள் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் 32 பலதுறை மருந்தகங்களைக் கொண்டிருக்க திட்டமிடப்பட்டுள்ளன.
காத்திப் பலதுறை மருந்தகம் 2023ஆம் ஆண்டு திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கட்டுமானத் தளத்தில் ஊழியர்கள் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் கட்டுமானம் தாமதமானது.
காத்திப் பலதுறை மருந்தகத்திற்கு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 800 பேர் மருத்துவ சேவை நாடி வருவார்கள் என்று அந்தப் பலதுறை மருந்தகத்தின் தலைவர் டாக்டர் கேப்ரியல் டிங் தெரிவித்தார்.
மேலும், காத்திப் பலதுறை மருந்தகத்திற்கு வரும் 15 விழுக்காடு மக்கள் 65க்கும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களாக உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தில் சுமார் 10,000 நோயாளிகளை இணைக்க காத்திப் பலதுறை மருந்தகம் நடவடிக்கை எடுத்து வருவதாக டாக்டர் டிங் கூறினார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி பலதுறை மருந்தகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

