சிங்கப்பூர் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்படும் அனைத்து உந்து நடமாட்டச் சாதனங்களும், வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் அளவு வரம்புகளுக்குக் கட்டுப்படவேண்டும்.
பாதைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதே புதிய விதிமுறைகளின் நோக்கம் என்று போக்குவரத்துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
மிதிவண்டிகள், மின்சாரம் இல்லா சரக்கு மிதிவண்டிகள், முச்சக்கர மிதிவண்டிகள் போன்றவற்றுக்கு விதிமுறைகள் பொருந்தும்.
மார்ச் 1ஆம் தேதி முதல், சாலைகளில் பயன்படுத்தக்கூடிய அனைத்து உந்து நடமாட்டச் சாதனங்களுக்குமான அதிகபட்ச அளவு 130 சென்டிமீட்டர் அகலம்; 260 சென்டிமீட்டர் நீளம். பாதைகளில் செல்லும் சாதனங்களுக்கான தற்போதுள்ள வரம்புகளும் மிதிவண்டிகள், மின்சாரம் இல்லா சரக்கு மிதிவண்டிகள், முச்சக்கர மிதிவண்டிகள் போன்றவற்றுக்குப் பொருந்தும்.
தற்போது பாதைகளில் செல்லக்கூடிய சாதனங்கள் அதிகபட்சமாக 70 சென்டிமீட்டர் அகலமாகவும் 20 கிலோகிராம் பாரம் ஏற்றா எடையுள்ளதாகவும் இருக்கலாம்.
இந்தச் சாதனங்களில் குறைந்தது ஒரு நிறுத்தும் கருவி (பிரேக்) செயல்படவேண்டும்.
புதுமையான நடமாட்டச் சாதனங்கள் மின்சாரத்தில் இயங்கக்கூடாது. மின்சாரத்தில் இயங்கும் புதுமையான சாதனங்களுக்கு அனைத்துலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும்வரை அவை தொடர்ந்து பொதுப் பாதைகளிலும் சாலைகளிலும் தடைசெய்யப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டது.