சிங்கப்பூரில் ஏறக்குறைய 170 வேலைகளை உருவாக்கும் சேமிப்புக் கிடங்கு ஒன்று தயாராகி வருகிறது.
ஜப்பானிய தளவாட நிறுவனமான சங்கியூவின் துணை நிறுவனம் அந்தப் புதிய கிடங்கை துவாசில் கட்டுகிறது.
வேலை வாய்ப்பில் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ‘சங்கியூ சிங்கப்பூர்’ குறிப்பிட்டது.
இன்னமும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நான்கு மாடி சரக்குக் கிடங்கு சுமார் 38,380 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். 2026ஆம் ஆண்டில் அது முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.
துவாஸ் விநியோக நிலையம் (TDH: Tuas Distribution Hub) எனும் அந்தக் கிடங்கில், முழுமையாக குளிர்சாதன வசதிகளுடன் வெப்பக்கட்டுபாடுகள், தொழில்துறைக்கு ஏற்ற நிர்வாகக் கட்டமைப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டிருக்கும்.
தானியக்க சாதனங்களுடன் எரிசக்தி, மனிதவள சேமிப்பு அம்சங்களும் இருக்கும் என்று சங்கியூ சிங்கப்பூர் கூறியது.
புதிதாக மேம்படுத்தப்படும் துவாஸ் மெகா துறைமுகத்துக்கு அருகே துவாஸ் தொழிற்பேட்டையில் டிடிஎச் கட்டப்பட்டு வருகிறது.
இம்மாதம் 25ஆம் தேதி டிடிஎச் நிலையம் தொடர்பான வர்த்தக முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக அதிகாரபூர்வமற்ற வகையில் திறக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தானியக்க வழிகாட்டி வாகனங்கள், சரக்குக் கிடங்கு முறைகளைக் கையாள தகவல், தொழில்நுட்ப நிபுணர்கள், தளவாட நிர்வாகிகள், தரக்கட்டுப்பாட்டு மேற்பார்வையாளர்கள், வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகள், பாதுகாப்பு வசதி நிர்வாகிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள், தளவாட மேலாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு டிடிஎச் வேலை வாய்ப்புகளை வழங்கவிருக்கிறது.

