பெருகிவரும் ஆபத்துகளுக்கு ஏற்றவாறு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளைத் தயார்ப்படுத்தவும் எதிர்காலத்தில் அவர்களின் திறன்களை அளவிடவும் அப்படையின் மேம்படுத்தப்பட்ட குடிமைத் தற்காப்புக் கழகம் உதவும்.
குடிமைத் தற்காப்புப் படையின் ஆண்டு வேலைத் திட்டக் கருத்தரங்கில் தீயணைப்பு ஆராய்ச்சி மையம், தேசிய அவசர மருத்துவ உதவி சேவை பயிற்சி மையம் போன்ற புதிய வசதிகளை உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் அதிகாரபூர்வமாக திங்கட்கிழமை திறந்துவைத்தார்.
“சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உலகின் தலைசிறந்த உயிர்காக்கும் படையாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. குடிமை, மருத்துவ அவசர உதவி சேவைகளை வழங்குவதில் சிங்கப்பூர் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது,” என அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
மேலும் அவர், “எங்கள் அதிகாரிகளை சிறப்பாகத் தயார்ப்படுத்த உலகத் தரம் வாய்ந்த வசதிகளிலும் தொழில்நுட்பத்திலும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இதன்மூலம் அதிகாரிகள் முன்னணியில் திறம்பட செயல்பட முடியும்,” என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், ஆஸ்திரேலியா, ஹாங்காங், மலேசியா போன்ற நாடுகளின் தீயணைப்புத் துறை பிரதிநிதிகள், உள்துறை இணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் உட்பட 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஜாலான் புசாரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.