பலமாடி வாகன நிறுத்துமிடத்தின் கூரையில் பூப்பந்துத் திடல், வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் 400 மீட்டர் ஓட்டப் பாதை, கூரையுடன் கூடிய கூடுதலான பல பயன்பாட்டுத் திடல்கள்.
பொது வீடமைப்புப் பேட்டைகளில் பலதரப்பட்ட உடற்பயிற்சிக் கருவிகளையும் விளையாட்டு இடங்களையும் கிடைக்கச் செய்யும் முயற்சியின்கீழ், வரும் ஆண்டுகளில் தீவு முழுவதும் உள்ள வீடமைப்புப் பேட்டைகளில் கட்டப்படும் புதிய விளையாட்டு வசதிகளுக்கான திட்டங்களில் இவை அடங்கும்.
வீடமைப்புப் பேட்டைகளில் இத்தகைய வசதிகளைக் கட்ட கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நகர மன்றங்களும் ‘வீடமைப்புப் பேட்டைகளில் விளையாட்டு வசதிகள்’ (Sport-in-Precinct) திட்டத்தைப் பயன்படுத்துகின்றன.
2026 இறுதிக்குள் குறைந்தது ஐந்து பேட்டைகள் அதற்கான திட்டங்களைப் பெறவிருக்கின்றன. மேலும் இரு திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு 2025ல் அழைப்பு விடுக்கப்படவுள்ளன.
தற்போது சிங்கப்பூர் எங்கும் வெவ்வேறு கட்டங்களில் மேம்பாட்டில் உள்ள 24 திட்டங்களில் அவை அடங்கும்.
‘வீடமைப்புப் பேட்டைகளில் விளையாட்டு வசதிகள்’ திட்டம் 2014ல் தொடங்கப்பட்டதிலிருந்து ஏறக்குறைய 10 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முயற்சியில், எம்.பி.க்களும் நகர மன்றங்களும் இந்த வசதிகளைத் திட்டமிடுவதற்கும் கருத்தமைப்பதற்கும் ஸ்போர்ட் எஸ்ஜி அமைப்புடன் இணைந்து பணியாற்றுகின்றன. இந்த வசதிகளுக்கு ஸ்போர்ட் எஸ்ஜி நிதியளிக்கிறது.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெவ்வேறு வயதுப் பிரிவுகள், ஆற்றல்களைக் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு விளையாட்டு வசதிகளை இத்திட்டங்கள் மேலும் அணுகக்கூடியதாக்கும் என்றனர். குடியிருப்பாளர்கள் துடிப்பான வாழ்க்கைமுறையைக் கட்டிக்காக இது ஊக்குவிக்கும் என எம்.பி.க்கள் நம்புகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய வசதிகள் குடியிருப்பாளர்களை நெருக்கமாக்குவதுடன், அவர்களிடையே வலுவான சமூகப் பிணைப்பையும் ஏற்படுத்தும் என அவர்கள் கூறினர்.
விளையாட்டு வசதிகள் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் இடம்பெறுகின்றன. 2030க்குள் வீடமைப்புப் பேட்டைகளிலிருந்து 10 நிமிட நடைத் தூரத்திற்குள் விளையாட்டு வசதிகளைக் குடியிருப்பாளர்கள் சென்றடைவதை இந்தப் பெருந்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
2025ல் திறக்கப்படும் திட்டங்களில் ஒன்று, சுவா சூ காங் அவென்யூ 7ல் அமையும். அங்கு கூரையுடன் கூடிய கூடைப்பந்துத் திடல், உடற்பயிற்சி இடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.
இந்த ஒருங்கிணைந்த திட்டம் ஜூன் மாதம் முழுமையாக நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுவதாக சுவா சூ காங் குழுத்தொகுதி எம்.பி. டோன் வீ தெரிவித்தார்.
அடித்தள ஆலோசகர்கள், குடியிருப்பாளர்கள், இதர பங்குதாரர்கள் தற்போதைய விளையாட்டு வசதி திட்டங்கள் குறித்து ஆக்ககரமான கருத்துகளை வழங்கியுள்ளதாக ஸ்போர்ட் எஸ்ஜி செய்தித் தொடர்பாளர் கூறினார்.