ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர், சிங்கப்பூர் ஊழியரணி ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, ஜூலை முதல் தேதியிலிருந்து, திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு (எஸ்டபிள்யூடிஏ) என்ற பெயரில் செயல்படும்.
அமைப்பின் நிர்வாகக் குழுத் தலைவராகத் திரு லிம் சிம் செங் நியமிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு புதன்கிழமை (ஜூன் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
டிபிஎஸ் வங்கியின் முன்னாள் குழும நிர்வாகியும் எஸ்ஐஏ இன்ஜினியரிங் நிறுவனத்தின் தற்போதைய துணைத் தலைவருமான இவர், சிங்கப்பூர் நில ஆணையம், கட்டட, கட்டுமான ஆணையம் ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நைஜீரியாவுக்கான சிங்கப்பூரின் தூதராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார்.
பொதுத்துறையிலும் வணிக நடவடிக்கைகளிலும் திரு லிம்முக்குக் கிடைத்த நல்ல அனுபவம், அமைப்பின் உத்திபூர்வ இலக்கை வழிநடத்தவும் முக்கியப் பங்காளிகளுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று அமைச்சு தெரிவித்தது.
அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திருவாட்டி திலிஸ் போய் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் சாம் ஹுய் ஃபோங், ‘லவ், பொனிட்டோ’ நிறுவன இணை நிறுவனர் ரேச்சல் லிம் உட்பட பொது, தனியார் துறைகளைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் நிர்வாகக் குழு, ஈராண்டு காலத்திற்குப் பொறுப்பேற்கும். குழுவின் பதவிக்காலம் 2028ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கும்.
பிரதமர் லாரன்ஸ் வோங் இவ்வாண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி வரவுசெலவுத் திட்ட உரையின்போது அறிவித்தபடி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த சூழலை உருவாக்க இரு அமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருதல், ஊழியர்களைப் பணியமர்த்துதல், பயிற்சி வழங்குதல் முதலியவற்றில் புதிய அமைப்பு கவனம் செலுத்தும்.
திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் மே 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

