ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர், சிங்கப்பூர் ஊழியரணி ஆகிய இரு அமைப்புகளையும் இணைத்து, ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய ஆணை பெற்ற கழகம் அமைக்கப்படவுள்ளது.
திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு (எஸ்டபிள்யூடிஏ) என்று அழைக்கப்படும் புதிய அமைப்பின் முதல் நிர்வாகக் குழு, ஈராண்டு காலத்திற்குப் பொறுப்பேற்கும் என்று மனிதவள அமைச்சு புதன்கிழமை (ஜூன் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
முதல் நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 2028ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கும். சிங்கப்பூர் ஊழியர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த இரு அமைப்புகளும் இணைக்கப்படுகின்றன.
வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருதல், ஊழியகளைப் பணியமர்த்துதல், பயிற்சி வழங்குதல் ஆகியவற்றிலும் புதிய அமைப்பு கவனம் செலுத்தும். சிங்கப்பூரின் ஊழியரணியையும் ஊழியர்களின் திறனையும் மேம்படுத்தும் புதிய அமைப்பு இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் அமைக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் முன்னதாகக் கூறியிருந்தார்.
திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் மே 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

