பொதுத் தேர்தல் 2025ல் மொத்தம் 89 புதுமுகங்கள் போட்டியிட்ட நிலையில் அதிலிருந்து 25 பேர் நாடாளுமன்றம் செல்கின்றனர். மொத்தமுள்ள 97 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 25.7 விழுக்காட்டினர் புதுமுகங்களாக இருப்பர்.
இத்தேர்தலில் ஆக அதிகமான அளவு புதுமுகங்கள் போட்டியிட்டனர். கடந்த 2020ஆம் ஆண்டு 76 புதுமுகங்கள் களம் கண்டனர்.
மக்கள் செயல் கட்சியின் சார்பில் 32 புதுமுகங்கள் களம் கண்டனர். அவர்களில் 24 பேர் வென்று நாடாளுமன்றம் செல்கின்றனர்.
பாட்டாளிக் கட்சியின் சார்பில் 14 புதுமுகங்கள் களம் கண்டனர். போட்டியிட்ட வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள். அவர்களில் இருவர் நாடாளுமன்றம் செல்கின்றனர்.
அல்ஜுனிட் குழுத்தொகுதியின் வேட்பாளர் கென்னத் தியோங், செங்காங் குழுத்தொகுதி வேட்பாளர் அப்துல் முஹைமின் அப்துல் மாலிக் ஆகிய புதுமுகங்கள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
மக்கள் செயல் கட்சி மொத்தம் 24 தொகுதிகளில் புதுமுகங்களைக் களமிறக்கியிருந்தது. அவற்றில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட புதுமுகங்கள் வெற்றிமுகம் கண்டனர்.
குறிப்பாக, நீ சூன் குழுத்தொகுதியில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தலைமையிலான அணி நான்கு புதுமுகங்களைக் கொண்டிருந்தது. அவ்வணி நாடாளுமன்றம் நோக்கி நடைபோடுகிறது.
மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் போட்டியிட்ட மசெகவின் புதுமுகமான கோ ஸீ கீ வென்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிட்டோரில் 12 பேர் புதுமுகங்கள். அவர்களுள் இருவர் வென்றுள்ளனர். செம்பவாங் குழுத்தொகுதியில் 7 புதுமுகங்களில் இருவரும், அங் மோ கியோ குழுத்தொகுதியில் 9 புதுமுகங்களில் ஒருவரும் வென்றுள்ளனர்.