இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) அறைகளில் பாதிக்கும் மேலானவற்றில், அதாவது 44ல் பழைய கைகழுவும் தொட்டிகளும் தண்ணீர்க் குழாய்களும் (water taps, sinks) அகற்றப்பட்டுள்ளன.
மாசுபடும் அபாயத்தைக் குறைக்கவும் நீர், எரிசக்திப் பயன்பாட்டுக்கான செலவைக் குறைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதற்குப் பதிலாக கிருமிக்கொல்லி திரவத்தைக் கொண்டு நோயாளிகளுக்கான சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எல்லா ஐசியு கூடங்களிலும் விரைவில் மாற்றம்
இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் 74 ஐசியு அறைகள் இருக்கின்றன. 2028ஆம் ஆண்டிறுதிக்குள் எஞ்சிய அறைகளிலும் பாரம்பரிய நீர்க் குழாய்களையும் தொட்டிகளையும் அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாசுபடுவதைக் குறைக்கவும் நோயாளிப் பராமரிப்பை மேம்படுத்தவும் அண்மைக் காலமாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவற்றின் ஓர் அங்கமாக நீர்க் குழாய்கள், தொட்டிகள் அகற்றம் இடம்பெறுகிறது.
நீடித்த நிலைத்தன்மை நெக்சஸ் மாநாட்டில் (Sustainability Nexus Forum 2026) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) பேசிய இங் டெங் ஃபோங் மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனை ஆகியவற்றின் தலைமை நீடித்த நிலைத்தன்மை அதிகாரியான இங் கியென் சுவான் இதனை அறிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்புத் துறை, ஆக அதிகமாக மாசுபடுத்தும் துறைகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
கரிமப் பயன்பாட்டைக் குறைக்க சரியானதைச் செய்யுமாறு அவர், சுகாதாரப் பராமரிப்புத் துறையினரைக் கேட்டுக்கொண்டார். ஒர் உலகம் மட்டுமே இருப்பதாகவும் அதற்கு ‘மாற்று ஏற்பாடு’ எதுவும் இல்லை என்றும் அவர் எச்சரித்தார்.
முதன்முறையாக நடந்த மாநாடு
முதன்முறையாக நடைபெற்ற நீடித்த நிலைத்தன்மை நெக்சஸ் மாநாடு 2026க்கு இங் டெங் ஃபோங் மருத்துவமனையும் ஜூரோங் சமூக மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்தன.
சுகாதாரப் பராமரிப்பு, தளவாடம், உள்கட்டமைப்பு, எரிசக்தி, மருந்து, கல்விமான், அரசாங்கம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, பருவநிலை நிகழ்வுகளின்போதும் வணிகத்தைத் தொடர்வதுடன், செழிப்பாகவும் இருக்க அமைப்புகள் மேலும் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.


