சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை (ஜூலை 15) நடைபெற்ற சாதாரண நிலை (ஓ லெவல்) ஆங்கிலப் பாடத்துக்கான வாய்மொழித் தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை என்று சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
தேர்வுக்காகப் படித்த வினாவுக்குப் பதிலாக வேறுவிதமான வினாக்கள் கேட்கப்பட்டதாக இணையத்தில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர்.
பத்து நிமிட தேர்வு ஆயத்த நேரத்தின்போது, தேர்வு நடத்துநர் வாசித்த வினாவும் மாணவர்களுக்குக் காட்டப்பட்ட வினாவும் வெவ்வேறு மாதிரியாக இருந்தது என்று ‘ரெட்டிட்’ (Reddit) தளத்தில் வெளியான ஒரு பதிவைத் தொடர்ந்து அந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
சாதாரண நிலை வாய்மொழித் தேர்வு வழக்கமாக ஐந்து நாள்கள் நடத்தப்படும். இம்முறை, அந்தத் தேர்வின் மூன்றாவது நாளில் வினாவில் முரண்பாடுகளைச் சந்தித்ததாகப் பலர் கூறியிருந்தனர்.
அது பற்றி ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளின் கேள்விகளுக்கு சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் பதிலளித்தது.
இணையத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக சனிக்கிழமை (ஜூலை 18) அது தெரிவித்தது.
தொடக்கத்தில், திரையில் இருந்த குறிப்புகளைத் தாங்களே தவறாகப் படித்துவிட்டதை ஒப்புக்கொண்டவர்களின் கருத்துகளும் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்ததை அது சுட்டிக்காட்டியது.
கழகத்தின் பேச்சாளர் ஒருவர் அதுபற்றிய ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
“வாய்மொழித் தேர்வு ஒவ்வொரு முறை நடைபெறும்போதும் காணொளி மற்றும் வினாக்களின் ஒரே ஒரு வடிவம் மட்டுமே கழகம் மூலம் எல்லாத் தேர்வு மையங்களிலும் வெளியிடப்படுகிறது.
“அதனால், மாணவர்களும் தேர்வு நடத்துநர்களும் ஒரே மாதிரியான தேர்வு காணொளி மற்றும் தேர்வு உள்ளடக்கத்தையே பெறுகின்றனர்.
“அத்துடன், வாய்மொழித் தேர்வு தொடங்குவதற்கு முன்பே, சரியான காணொளி மற்றும் கேள்விகள் திரையில் காட்டப்படுவதை உறுதிசெய்வதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன,” என்றார் அவர்.

