சிங்கப்பூரிலுள்ள போயிங் 737-800 ரக விமானங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் கோளாறோ நம்பகத்தன்மையற்ற நிலையோ காணப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ரக விமானம், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தென்கொரியாவில் உள்ள முவான் அனைத்துலக விமான நிலையத்தில் ஓடுபாதை முடிவில் இருந்த கான்கிரீட் சுவரை மோதித் தீப்பற்றிக்கொண்டு, 179 உயிர்களைப் பறித்தது.
இந்நிலையில், சிங்கப்பூரின் விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதைகளுக்கு அருகே எவ்வித கான்கிரீட் கட்டமைப்புகளும் இல்லை என்று திரு சீ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மோதிக்கொள்ளும் சூழல் ஏதேனும் ஏற்பட்டாலும் ஓடுபாதைகளுக்கு அருகே உள்ள அனைத்து விமானப் போக்குவரத்து உபகரணங்களும் முறிந்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜேஜு ஏர் விமானம் 2216 விபத்திலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் குறித்தும் இதே போன்ற சம்பவம் நிகழ்வதைத் தடுக்க சிங்கப்பூரின் தயார்நிலை குறித்தும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைச் சேர்ந்த திரு அங் வெய் நெங் எழுப்பிய கேள்விகளுக்கு திரு சீ இவ்வாறு பதிலளித்தார்.
விபத்து தொடர்பாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், தென்கொரியத் தரப்புடனும் அமெரிக்காவின் போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனத்துடனும் தொடர்பில் இருப்பதாக திரு சீ குறிப்பிட்டார்.