சிங்கப்பூரில் அண்மைய ஆண்டுகளில் வீட்டுச் சந்தை மேம்பாடு கண்டதை நம்மால் காணமுடிந்தது. கிருமிப்பரவல் காலகட்டத்தின்போது மறுவிற்பனை வீட்டு விலைகள் சாதனை அளவை எட்டின.
பெரும்பாலான வீடமைப்புப் பேட்டைகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டு விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளபோதும், செம்பவாங் வட்டாரம் மட்டும் தனித்து நிற்கிறது.
ஒரு காலத்தில் வெறிச்சோடி கிடந்த அந்தப் பகுதியில் இப்போது நான்கறை, ஐந்தறை வீடுகளுக்கான விலைகள், வீவக பேட்டைகளிடையே விழுக்காட்டு அடிப்படையில் ஆக அதிக உயர்வைக் கண்டுள்ளன.
செம்பவாங்கில் உள்ள நான்கறை வீடுகளுக்கான இடைநிலை மறுவிற்பனை வீட்டு விலை ஐந்தாண்டுக்கும் குறைவான காலகட்டத்தில் $338,000லிருந்து 63 விழுக்காடு கூடி $551,000ஆனது.
அங்குள்ள ஐந்தறை வீடுகளுக்கான இடைநிலை மறுவிற்பனை வீட்டு விலை அதே காலகட்டத்தில் $392,000லிருந்து $602,900க்கு அதிகரித்தது.
செம்பவாங்கில் மேம்பட்ட இணைப்பும், அதிகமான வாழ்க்கைமுறை தொடர்பான அம்சங்களும் இருப்பதால் மக்கள் அங்கு வீடுகளை அதிகம் நாடுவதாக சிங்கப்பூர் சொத்து முகவர்கள் நிறுவனத்தின் (எஸ்ஆர்ஐ) ஆய்வு, தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் மோகன் சந்திரசேகரன் கூறினார்.
அந்தப் பகுதியில் கேன்பரா ரயில் நிலையத்தின் திறப்பு, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
“மேம்பட்ட போக்குவரத்து முறைகள் சௌகரியத்தை மட்டும் வழங்குவதில்லை. சொத்து மதிப்புகளைப் பொறுத்தவரை அவை ஆக்கபூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன,” என்று திரு சந்திரசேகரன் கூறினார்.