சில வளைகுடா நாடுகளில் எதிர்பாராவிதமாக மூடப்பட்டுள்ள வான்வழிகள் காரணமாக, உலகளாவிய ஆகாயச் சரக்கு விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தனது மத்திய கிழக்குச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் இல்லை என்று விமானச் சரக்குகளைக் கையாளும் ‘சேட்ஸ்’ நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, சவூதி அரேபியாவிலும் ஓமானிலும் உள்ள ‘சேட்ஸ்’ மத்திய கிழக்கு நிலையங்களில் செயல்பாடுகள் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் தொடர்வதாக வெள்ளிக்கிழமை (மார்ச் 6) வெளியிடப்பட்ட அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.
அந்த வட்டாரத்தில் உள்ள அதன் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ‘சேட்ஸ்’ கூறியது. அங்குப் பணிபுரியும் சிங்கப்பூரர்களும் அவர்களில் அடங்குவர்.
மத்திய கிழக்குப் போரை அணுக்கமாகக் கண்காணிப்பதாக ‘சேட்ஸ்’ கூறியது. சில வளைகுடா நாடுகளில் வான்வழிகள் மூடப்பட்டிருப்பது குறித்து அது ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
விமான நிறுவன வாடிக்கையாளர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருப்பதாகவும் அது கூறியது. வர்த்தகத் தடங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப தனது செயல்பாடுகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும் என்று ‘சேட்ஸ்’ தெரிவித்தது.
வான்வழிகள் மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டிருக்கும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் நாடுகளுக்கு, சவூதி அரேபியாவிலும் ஓமானிலும் உள்ள அதன் வசதிகள் மாற்று வழிகளாக அமையக்கூடும் என்று ‘சேட்ஸ்’ கூறியது.

