பொதுமக்கள் போக்குவரத்துக் குற்றங்களுக்கு எதிரான மேல்முறையீடுகளை நேரடியாக, தொலைப்பிரதி, மின்னஞ்சல், அஞ்சல் ஆகியவற்றின் மூலம் வியாழக்கிழமையிலிருந்து சமர்ப்பிக்க முடியாது.
போக்குவரத்து மின் மேல்முறையீட்டு இணையவாசல் மூலம் அனுப்பப்படும் மேல்முறையீடுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
வாகனம் ஓட்டுவதற்கான உரிமங்கள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படுதல், மருத்துவக் காரணங்களின் தொடர்பில் வழங்கப்படும் உரிமங்கள் ஆகியவற்றின் தொடர்பிலான மேல்முறையீடுகளும் இந்த இணையவாசலில் சமர்ப்பிக்கப்படலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
புதிய செயல்முறையைப் பற்றிப் பேசியபோது, மேல்முறையீட்டுக்கான முடிவுகள் வெளிவர இரண்டு முதல் நான்கு வாரங்கள் ஆகும் என்று அவர்கள் கூறினர்.
மருத்துவ அவசரங்கள் போன்ற நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் உள்ளவர்களின் மேல்முறையீடுகள் மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதைப் போக்குவரத்துக் காவல்துறையினர் வலியுறுத்துகின்றனர். அவர்கள் ஆதார ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.
சாலைகளைப் பயன்படுத்தும் அனைவரையும் பாதுகாக்க, போக்குவரத்துக் குற்றங்களைப் புரிவோரின் தொடர்பில் போக்குவரத்துக் காவல்துறை உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகுதிநிலைகளைப் பூர்த்திசெய்யாதவர்களின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
இணையவாசலைப் பயன்படுத்த, பொதுமக்கள் www.police.gov.sg/e-services எனும் இணையத்தளத்திற்குச் செல்லலாம்.

