ஓய்வுபெறும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் முன் ஆறிலிருந்து 12 மாதங்களுக்கு எந்த வேலையும் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
“வேலையில் எனக்குக் கெட்ட பழக்கம் உண்டு. நான் நீண்ட நேரம் வேலை செய்வேன். எனக்கென்று செலவிட நேரம் இருக்காது,” என்றார் திரு ஹெங்.
தமக்குப் பிடித்தமான இடங்களுக்கு எல்லாம் செல்லப்போவதாகவும், பிடித்த புத்தகங்களை வாசித்து, இசையைக் கேட்டு பிறகு பயனுள்ளவற்றைச் செய்வது பற்றி யோசிக்கப்போவதாக அவர் கூறினார்.
64 வயது திரு ஹெங், பிள்ளைகளுடன் உற்றார் உறவினர்களுடன் நேரம் செலவிட்டு ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கப்போவதாக சொன்னார்.
கிட்டத்தட்ட ஓராண்டுக்கு அரசியலுக்குப் பிந்திய வாழ்க்கை பற்றி திரு ஹெங் திட்டமிடுவதாக இல்லை.
2024 மே மாதம், திட்டப்படி மாற்றங்கள் அனைத்தும் சுமுகமாகப் போனால் அரசியலிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாகப் பிரதமராகப் பதவியேற்ற திரு லாரன்ஸ் வோங்கிடம் கூறியதைத் திரு ஹெங் நினைவுகூர்ந்தார்.
14 ஆண்டுகள் அரசாங்கத்தில் இருந்த துணைப் பிரதமர் ஹெங் ஏப்ரல் 23 வேட்மனுத் தாக்கல் தினத்தன்று அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
திரு ஹெங், காவல்துறை அதிகாரி, மூத்த அமைச்சர் லீ குவான் யூவின் முதல் அந்தரங்க செயலாளர், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் நிர்வாக இயக்குநர் என பல பொறுப்புகளை வகித்தார்.
தொடர்புடைய செய்திகள்
2011ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிறகு உடனடியாக அவர் கல்வி அமைச்சராக்கப்பட்டார். பின் நிதியமைச்சராகி சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியைப் பார்த்துக்கொள்ளும் எதிர்கால பொருளியல் ஆலோசனைக் குழுவிற்கும் எதிர்கால பொருளியல் மன்றத்திற்கும் திரு ஹெங் தலைமைத் தாங்கினார்.
சிங்கப்பூர்க் காவல் படையில் வெளிநாட்டுக் கல்விமானுமான திரு ஹெங், பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் சேர விரும்பினார். ஆனால் பொதுச் சேவை ஆணையத்தின் ஆலோசனைப்படி அவர் பொருளியல் துறையில் சேர்ந்தார்.
தமது ஓய்வுகாலத்தில் ஆரோக்கியத்துக்குத்தான் முதலிடம் கொடுக்கவிருப்பதாகவும் திரு ஹெங் குறிப்பிட்டார். 2016ஆம் ஆண்டு அமைச்சரவை கூட்டத்தின்போது அவர் பக்கவாதம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார்.