தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி உறுப்பினர் கெவ்ரின் லிம் சிங்கப்பூரர்கள் பொதுத் தேர்தலில் எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து இனி அவர்கள் புகார் கூறக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி பெற்ற அபார வெற்றியைத் தொடர்ந்து திருவாட்டி லிம் தேர்தல் முடிவுகள் வந்த சனிக்கிழமையை ‘இழந்ததை நினைத்து வருந்தும் நாள்’ என வர்ணித்தார்.
மக்கள் செயல் கட்சிக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்கள் மின்னல் தாக்குவது போல் அன்றாடம் அதிர்ச்சிக்கு உள்ளாக வேண்டும் என சாபமிடும் விதமாக கூறியுள்ளார்.
திருவாட்டி லிம் சார்ந்துள்ள தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி செம்பவாங், தெம்பனிஸ் குழுத்தொகுதிகளில் போட்டியிட்டது.
அக்கட்சியின் இரு அணிகளும் போட்டியிட்ட குழுத்தொகுதிகளில் 12.5 விழுக்காடு வாக்குகள்கூடப் பெறாததால் அவை வைப்புத் தொகையை இழந்தன.
எனினும் திருவாட்டி லிம் தேர்தலில் போட்டியிடவில்லை.
செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சீ சுன் ஜுவானுக்கே வெற்றி வாய்ப்பை அதிகரிக்கவும் எதிர்க்கட்சி ஒற்றுமை உணர்வைக் காக்கவும் பலமுனைப் போட்டியைத் தவிர்க்கும் எண்ணத்தில் அந்தத் தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டார்.

