பராமரிப்பு ஊழியருக்கு நீக்குப்போக்கான வேலை, சம்பளம், விடுப்பு வழங்க பரிந்துரை

பராமரிப்பு ஊழியருக்கு நீக்குப்போக்கான வேலை, சம்பளம், விடுப்பு வழங்க பரிந்துரை

2 mins read
2f850a26-f0c1-4b95-92ed-e005b21d2205
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு இருதரப்புக்கும் பயனளிப்பதோடு, ஊழியர்கள் தங்களது பெற்றோருக்கான கடமைகளை நிறைவேற்றவும் இடமளிக்கும் என்று என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார். - படம்: சாவ் பாவ்
Google News Preferred Icon

வயதான குடும்ப உறுப்பினர்களைப் பராமரிக்கும் ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு, சம்பளத்துடன் சட்டபூர்வப் பராமரிப்பு விடுப்பு போன்றவற்றுடன் கூடுதல் உதவி வழங்க தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) புதன்கிழமை பரிந்துரைத்தது.

வேலை ஏற்பாடுகள், வெவ்வேறு பராமரிப்பாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப நீக்குப்போக்காக இருப்பதை முதலாளிகள் உறுதி செய்யவேண்டும். பணிகளைப் பிரித்து வேலையை மாற்றியமைக்க வேண்டும். வேறிடத்திலிருந்து வேலை செய்யவும் ஓரளவு அனுமதிக்க வேண்டும். அத்துடன், வேலை தேடுவோர் தங்களது தேவைகளின் அடிப்படையில் வேலையைத் தேர்ந்தெடுக்க, வேலை விளம்பரங்களில் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டு விவரங்களையும் முதலாளிகள் வெளியிட வேண்டும் என்று என்டியுசி பரிந்துரைக்கிறது.

விடுப்பு, ஊழியர் ஆதரவுத் திட்டங்கள், கட்டுப்படியாகும் பராமரிப்புச் சேவைகள் போன்ற வகையில் கூடுதல் ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்றும் என்டியுசி கேட்டுக்கொண்டது.

எல்லா ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் சட்டபூர்வப் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்றும் என்டியுசி வலியுறுத்தியது. வயதான குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதற்கும் எதிர்பாரா பராமரிப்புத் தேவைகளைக் கவனிக்கவும் இது உதவும் என்று என்டியுசி குறிப்பிட்டது.

குடும்ப உறுப்பினர்களில் இரத்தச் சொந்தங்கள், திருமண பந்தத்தினர், தத்தெடுக்கப்பட்டவர்கள் ஆகியோரும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் நாட்பட்ட நோய்கள், உடல்நல, மனநலப் பிரச்சனைகள் அனைத்தும் உள்ளடங்கவேண்டும் என்றும் என்டியுசி கேட்டுக்கொண்டது.

சட்டபூர்வ பராமரிப்பு விடுப்பு தற்போது நடப்பில் இல்லாவிட்டாலும், அதன் அவசியத்தை அதிகமான முதலாளிகள் உணர்கின்றனர் என்றது என்டியுசி. 2022ல், 30 விழுக்காடு முதலாளிகள் சம்பளத்துடன் குடும்பப் பராமரிப்பு விடுப்பு அளித்தனர். இது, 2012ஆம் ஆண்டின் 15 விழுக்காட்டைவிட இருமடங்கு அதிகம்.

எதிர்பாராத பராமரிப்புத் தேவைகளுக்கு சம்பளமில்லா விடுப்பு எடுக்க அனுமதிக்கலாம் என்றும் என்டியுசி பரிந்துரைத்தது. இறுதியாக, ஊழியர்களுக்குக் கட்டுப்படியாகும் பராமரிப்புச் சேவை கிடைப்பதற்கான முயற்சி தொடரவேண்டும் என்று என்டியுசி கூறியது.

என்டியுசி நடத்திய ஆய்வின்படி, 85 விழுக்காடு பராமரிப்பாளர்கள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளையும், 64 விழுக்காட்டினர் பராமரிப்பளிக்க சம்பளத்துடன் விடுப்பு பெறவும், 57 விழுக்காட்டினர் நிதி ஆதரவு பெறவும் விரும்புகின்றனர்.

வேலை செய்யும் பராமரிப்பாளர்களில் 43 விழுக்காட்டினர் சம்பளமில்லா விடுப்பு எடுத்தனர், சம்பளத்தை இழந்தனர், அல்லது பராமரிப்பின் காரணமாகச் சிறிது காலம் வருமானமில்லாமல் இருந்தனர். சுமார் 36 விழுக்காட்டினர் சம்பளமுள்ள விடுப்பு முழுவதையும் பயன்படுத்தி முடித்துவிட்டனர். தங்களது உற்பத்தித்திறன் குறைந்ததாக 32 விழுக்காட்டினர் ஆய்வில் தெரிவித்தனர்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு இருதரப்புக்கும் பயனளிப்பதோடு, ஊழியர்கள் தங்களது பெற்றோருக்கான கடமைகளை நிறைவேற்றவும் இடமளிக்கும் என்று என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், பராமரிப்பாளர் ஆதரவுக் குழு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
என்டியுசிவேலைஊழியர்ஆதரவு