சிங்கப்பூரின் இளையர்களும் இளம் மாணவர்களும் கல்வியில் இன்னும் சிறந்து விளங்கவும் எதிர்கால வாழ்க்கைத் தொழிலுக்கு தயாராகவும் கல்வி உதவி நிதியுடன் தலைமைத்துவ மேம்பாட்டு வாய்ப்புகளும் வழங்கப்படவிருக்கின்றன.
இதற்காக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) 2.5 மில்லியன் வெள்ளியை அவர்களது கல்விக்கும் நல்வாழ்வுக்கும் மானியமாக வழங்க முன்வந்துள்ளது.
கல்வி மானியங்களின் தொடரில் என்டியுசி ‘ஸ்டார்டர்’ விருதுகளும் அடங்கும். உயர்கல்வி நிலையங்களின் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஒப்பந்தமில்லா உதவித்தொகை வழங்கவும் இந்த புதிய முயற்சி இடம்பெறுகிறது.
2024ஆம் ஆண்டில் கல்வி நிதியுதவி வழங்குவதற்காக சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், தொழில்நுட்ப கல்விக் கழகம்(ஐடிஇ), தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றுடன் என்டியுசி கைகோத்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு $16,000, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு $9,000, ஐடிஇ மாணவர்களுக்கு $6,000 கல்வி மானியம் வழங்கப்படும் என்று என்டியுசியின் அறிக்கை குறிப்பிட்டது
கல்வி விருது பெற்றவர்கள், ஓராண்டு தலைமைத்துவ மேம்பாட்டுப் பயிற்சிகளைக் கடந்து செல்ல வேண்டும். பலதரப்பட்ட பயிலரங்குகளின்வழி தலைமைத்துவ திறன்களை அவர்கள் பெறுவார்கள். மேலும், இளையர் என்டியுசியின் வாழ்க்தைத் தொழில் திட்டங்களும் அவர்களை எதிர்கால வேலைகளுக்கு தயார்ப்படுத்தும்.

