தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தனது புதிய இ2ஐ (வேலைவாய்ப்பு, வேலைத்திறன் கழகம்) வாழ்க்கைத்தொழில் நிலையத்தை புதன்கிழமையன்று (மே 20), அங் மோ கியோ நடுவத்தில் திறந்துள்ளது. வேலை தேடுபவர்கள் வாழ்க்கைத்தொழில் சேவைகளைப் பெறுவதை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்தப் புதிய நிலையம், சிங்கப்பூரில் இ2ஐயின் 28வது நேரடித் தொடர்பு நிலையமாகும். இது சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வேலைத்திறன் சேவைகளையும் தொழில் வளங்களையும் வழங்கும்.
கூடுதலாக, என்டியுசி தனது ஏஐ-ரெடி எஸ்ஜி: திறன் ஆய்வகத்தையும் (AI-Ready SG: Skills Lab) அறிமுகப்படுத்தியுள்ளது. இது, எழுத்தறிவு, சரளநிலை, தேர்ச்சி ஆகிய மூன்று வெவ்வேறு திறன் நிலைகளில் ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பயிலரங்கத் தொடர்.
இந்த முயற்சிகள், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பொருளியலில் சிறந்த ஊழியர்களை மேம்படுத்துவதற்கும், சிறந்த வேலைகளை ஆதரிப்பதற்கும், சிறந்த பொருத்தங்களைச் செயல்படுத்துவதற்கும் என்டியுசியின் ‘ஏஐ-ரெடி எஸ்ஜி’ முயற்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
‘ஏஐ-ரெடி எஸ்ஜி’ திட்டமானது, புதிதாக உருவாக்கப்பட்ட முத்தரப்பு வேலைவாய்ப்பு மன்றத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும். இந்த மன்றம், ஏஐ மாற்றத்தின் மூலம் ஊழியர்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்குவதற்காக முத்தரப்புத் திறன்களை ஒருங்கிணைக்கிறது.
வாழ்க்கைத் தொழில் நிலையத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், “ஏஐ, பணியிடத்தை மாற்றியமைக்கும்போது, பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஊழியர்கள் தங்கள் புதிய திறன்களைச் சிறந்த வேலைகள் மற்றும் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்,” என்று பகிர்ந்துகொண்டார்.
“இ2ஐ வாழ்க்கைத்தொழில் நிலையங்களும் ‘ஏஐ-ரெடி எஸ்ஜி’:திறன் ஆய்வகமும், பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை அதிக நம்பிக்கையுடன் பயன்படுத்தவும், புதிய பதவிகளுக்கு மாறவும் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க உதவுகின்றன. முத்தரப்பு வேலைவாய்ப்பு மன்றம் மூலம், ஏஐ மாற்றத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்று மேலும் அவர் கூறினார்.

