மறுவிற்பனை செய்யப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை ஜூலை மாதம் 32.2 விழுக்காடு உயர்ந்தது.
ஏறத்தாழ 1,075 கூட்டுரிமை வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன.
ஜூன் மாதத்தில் 813 வீடுகள் விற்கப்பட்டன.
இந்தத் தகவலை எஸ்ஆர்எக்ஸ், 99.co ஆகிய சொத்து இணையவாசல்கள் ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று வெளியிட்டன.
மற்விற்பனை செய்யப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 21.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.
ஜூன் மாதப் பள்ளி விடுமுறைக்குப் பிறகு வீடு வாங்குவதும் விற்பதும் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று நம்புவதாக புரோப்நெக்ஸ் சொத்து முகவையின் ஆய்வு, உள்ளடக்கப் பிரிவுத் தலைவர் திருவாட்டி வோங் சியூ யிங் தெரிவித்தார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை விற்பனை செய்துவிட்டு தனியார் வீடு வாங்குவோராலும் இந்நிலை ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஆரஞ்சுடீ சொத்து முகவையின் தலைமை ஆய்வாளர் திருவாட்டி கிறிஸ்டின் சன் கூறினார்.
தங்களது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளைச் சிலர் குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்றதாகவும் கூடுதல் பணம் கிடைத்ததை அடுத்து அவர்கள் கூட்டுரிமை மறுவிற்பனை வீடு வாங்கியிருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

