சம்பள நிலுவைத் தொகையைக் கோரும் ஊழியர்கள் எண்ணிக்கை 400 அதிகரிப்பு

சம்பள நிலுவைத் தொகையைக் கோரும் ஊழியர்கள் எண்ணிக்கை 400 அதிகரிப்பு

2 mins read
2a8646fc-fa7e-4577-8db7-71222733f4c0
மனிதவள அமைச்சின் சேவை நிலையத்தில் திரண்ட கேபிஏ எஞ்சினியரிங் நிறுவனத்தின் வெளிநாட்டு ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கேபிஏ எஞ்சினியரிங் நிறுவனத்திடமிருந்து சம்பள நிலுவைத் தொகையைப் பெற்றுத்தரக் கோரி அதிகாரிகளை நாடிய வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 400க்கு அதிகரித்துள்ளது.

குளிரூட்டிச் சேவைகளை வழங்கும் கேபிஏ இன்ஜினியரிங், அது தொடர்பான எஸ்கே இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சம்பளத்தின் எஞ்சிய தொகையைத் தங்களுக்குத் தரவில்லை என்று 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் ஜூன் 22ஆம் தேதி திரண்டனர்.

அதையடுத்து, இந்தியாவையும் பங்ளாதே‌‌ஷையும் சேர்ந்த மேலும் 100 வெளிநாட்டு ஊழியர்கள் சம்பள நிலுவைத் தொகை குறித்தும் தங்கும் வசதி ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.

அரசாங்கம் சாரா அமைப்பான வெளிநாட்டு ஊழியர் நிலையம், இரு நிறுவனங்களையும் சேர்ந்த 300க்கும் அதிகமான பாதிக்கப்பட்ட ஊழியர்களைச் சந்தித்து உதவி வழங்க முன்வந்தது.

சம்பள நிலுவைத்தொகையைப் பெற்றுத்தரக் கோரி 100க்கும் அதிகமான ஊழியர்கள் அதிகாரிகளின் உதவியை நாடினர்.
சம்பள நிலுவைத்தொகையைப் பெற்றுத்தரக் கோரி 100க்கும் அதிகமான ஊழியர்கள் அதிகாரிகளின் உதவியை நாடினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ச்

இந்நிலையில், நிறுவனங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள் பலர், துவாஸ் வியூ விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு விநியோகமும் நின்றுவிட்டதாகத் தெரிகிறது.

நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் உணவு விநியோக நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு உணவு வழங்கிவந்தது. ஆனால், கேபிஏ நிறுவனம் கிட்டத்தட்ட $4,000 கட்டணத்தை இன்னும் செலுத்தாமல் இருப்பதாக உணவு விநியோக நிறுவனம் கூறியது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குப் பொதுவான ஓர் இயக்குநர் இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. அவர், குளிரூட்டிப் பழுதுபார்ப்புச் சேவைகள், குழாய்ப் பழுதுபார்ப்புச் சேவைகள், கட்டடச் சேவைகள் ஆகியவற்றை வழங்கும் வேறு ஐந்து நிறுவனங்களுடன் தொடர்புடையவர்.

அந்த வர்த்தக இயக்குநருக்கு இரண்டு வீட்டு முகவரிகள் உள்ளன. அவற்றுள் ஒன்று புக்கிட் தீமாவின் தனியார் குடியிருப்பு வட்டாரத்தில் இருக்கிறது. அது, கடந்த எட்டு மாதங்களாக வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்கிடையே, தங்களிடம் வாங்கிய கடனைத் திரும்பப் பெறுவதற்காகப் பலர் கடந்த சில வாரங்களாக நிறுவனத்தின் இயக்குநரைத் தொடர்புகொள்ள முயன்றுவருவதாகவும் அறியப்படுகிறது.

கேபிஏ எஞ்சினியரிங் நிறுவனம் 2014ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாக வர்த்தகப் பதிவேட்டில் காணமுடிகிறது. அந்த நிறுவனத்தில் தற்போது இன்னும் ஓர் இயக்குநர் பணியாற்றுகிறார்.

அவர், 2019ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தையும் 2020ஆம் ஆண்டில் மற்றொரு நிறுவனத்தையும் நிறுவினார். பின்னர், 2023ஆம் ஆண்டு எஸ்கே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்