ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிங்கப்பூரின் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டிலிருந்து இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக சொத்து ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க்கின் அறிக்கை ஒன்று காட்டுகிறது.
இந்நிறுவனத்தின் அண்மைய செல்வ அறிக்கை வியாழக்கிழமை (ஏப்ரல் 23) வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் 35 பெருஞ்செல்வந்தர்கள் புதிதாக இணைந்துள்ளதாகவும் இதனால் 2021ல் 28 ஆக இருந்த இவர்களின் மொத்த எண்ணிக்கை 2026ல் 63 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் அதி உயர் நிகர மதிப்புடைய தனிநபர்களின் எண்ணிக்கை (அதாவது 30 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கும் அதிக நிகர மதிப்பைக் கொண்டவர்கள் என வரையறுக்கப்படுகிறது) 54.5 விழுக்காடு விரிவடைந்து, 2021ல் 4,642ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை 2026ல், 7,171 ஆக அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2031க்குள் 10,495ஐ எட்டும் என்றும் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை 85 ஆக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் அதி உயர் நிகர மதிப்புடைய தனிநபர்களின் வளர்ச்சியில் இது சிங்கப்பூரை உலகின் முதல் 10 இடங்களில் நிலைநிறுத்துகிறது என்று நைட் ஃபிராங்க் கூறியுள்ளது.
“2025ஆம் ஆண்டில் வெறும் 736.3 சதுர கிலோமீட்டர் புவியியல் பரப்பளவைக் கொண்ட ஒரு சிறிய நாடாக இருந்தபோதிலும், இந்த வளர்ச்சி விகிதம் பல பெரிய மற்றும் நன்கு வளர்ச்சியடைந்த சந்தைகளைவிடப் பன்மடங்கு அதிகமாக உள்ளது,” என்று அது மேலும் கூறியது.
எனவே, உலகளவில் அதி-உயர்-நிகர-மதிப்புடைய தனிநபர்கள் மிகவும் அடர்த்தியாகக் குவிந்துள்ள சந்தைகளில் ஒன்றாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

