சிங்கப்பூர்ச் சிறைச்சாலைகளில் 16 வயது முதல் 21 வயது வரையிலான இளம் கைதிகள், விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 2025ல் அதிகரித்தது.
2024ல் 307ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2025ல் 418ஆக அதிகரித்தது.
2024ல் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 1,350ஆக இருந்தது. 2025ல் அது 1,639ஆக அதிகரித்தது.
இதன் விளைவாக, சிறைச்சாலைகளில் ஏற்படும் தாக்குதல் சம்பவங்களின் விகிதம், 2025ல் 10,000 கைதிகளுக்கு 76.7ஆக அதிகரித்தது. 2024ல் தாக்குதல் சம்பவங்களின் விகிதம் 54.4ஆகப் பதிவாகியிருந்தது.
சிங்கப்பூர்ச் சிறைத்துறையும் மஞ்சள் நாடாத் திட்டமும் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இந்தத் தகவல்களைத் தெரிவித்தன.
“கைதிகள் தொடக்கத்தில் சிறைவாழ்க்கைக்குப் பழகிக்கொள்ள சிக்கல்களை எதிர்கொள்வார்கள். அதிக மனக்கிளர்ச்சி கொண்டவர்கள், சக கைதிகளுடன் தகராறுகளில் ஈடுபடும்போது வன்முறையை நாடுவார்கள்,” என்று சிறைத்துறை கூறியது.
இருப்பினும், மற்ற சிறை சீர்திருத்த அதிகார வரம்புகளுடன் ஒப்பிடுகையில், தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைச் சிறைத்துறை சுட்டிக்காட்டியது.
மேலும், கடந்த ஆண்டு காவலில் இருந்து யாரும் தப்பிக்கவில்லை என்று அது தெரிவித்தது.
“சிறைக்கைதிகளுக்கு இடையிலான வன்முறையைச் சிறந்த வழியில் கண்டறிந்து தடுக்க, தொடர்ந்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று சிறைத்துறை உறுதியளித்தது.
போதைப்பொருள் பயன்பாடு, கடைத் திருட்டு போன்ற குற்றங்களுக்காக இளம் குற்றவாளிகள் தண்டனையை நிறைவேற்றுகின்றனர். 2024ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இளையர்களுக்கான முதன்மைக் குற்றங்களில் கடைத் திருட்டும் ஒன்றாக இருந்தது என்று காவல்துறைத் தரவுகள் தெரிவித்தன.
மேலும், ஈராண்டுகளுக்கு ஒட்டுமொத்த மறுகுற்ற விகிதம் குறைவாகவே இருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டின.
2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டில் மறுகுற்ற விகிதம் 0.6 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரித்து 21.9 விழுக்காடாகப் பதிவானது.
இது, அனைத்துலக அளவில் மறுகுற்ற விகிதங்களில் மிகக் குறைந்த ஒன்றாகத் தொடர்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த மறுகுற்ற விகிதம் நிலையாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

