மருத்துவமனையில் ஆடவரை மானபங்கம் செய்த தாதிக்குச் சிறை, பிரம்படி

1 mins read
15a6b241-60bf-44a9-b15e-ee1214c0b589
மருத்துவமனைக்கு வந்த ஆடவர் ஒருவரை மானபங்கம் செய்ததற்காக ஸ்டாஃப் தாதிக்கு சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. - படம்: சாவ்பாவ்

ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு வந்த ஆடவர் ஒருவரை மானபங்கம் செய்ததற்காக அங்குப் பணிபுரிந்த ஸ்டாஃப் தாதிக்கு ஓராண்டு, இரண்டு மாதச் சிறைத் தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

இந்தியாவைச் சேர்ந்த எலிப் சிவா நாகு என்ற முன்னாள் ஸ்டாஃப் தாதி மீது, பாதிக்கப்பட்ட ஆடவரைக் கிருமிகளிலிருந்து தூய்மைப்படுத்துவதாகக் கூறி அவரை மானபங்கம் செய்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டது.

அதன் விளைவாக மருத்துவமனைக்கு வந்த ஆடவர் மனத்தளவில் பாதிக்கப்பட்டார்.

சம்பவத்தை அடுத்து எலிப் அனைத்து தாதிப் பணியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்டவரின் வயது போன்ற விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இடம்பெறவில்லை.

பாதிக்கப்பட்ட ஆடவர் ஜூன் 18ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமது தாத்தாவைக் காணச் சென்றபோது மானபங்கம் செய்யப்பட்டதாக வழக்கறிஞர்கள் கூறினர்.

மாலை 7.30 மணியளவில் ஆடவர் நோயாளிகளுக்கான கழிவறைக்குள் சென்றபோது எலிப் ஆடவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.

சம்பவம் தொடர்பில் ஜூன் 21ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இரண்டு நாள்கள் கழித்து எலிப் கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்