சிங்கப்பூரில், அன்புக்குரியவர்கள் இல்லாத மனநலக் குறைபாடு உள்ள நோயாளிகளின் விவகாரங்களைக் கையாள, அவர்கள் சார்பில் செயல்பட தாதிமை இல்லங்கள் நிபுணர்களின் உதவியை நாடுகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தாதிமை இல்ல நோயாளிகளுக்கு நிபுணர்கள் 60 அறக்கட்டளை கணக்குகளை நிறுவியிருப்பதாக ‘ஸ்பெஷல் நீட்ஸ் டிரஸ்ட் கம்பெனி’ (Special Needs Trust Company - எஸ்என்டிசி) அமைப்பின் பொது நிர்வாகி எஸ்தர் டான் கூறினார்.
அப்படி என்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது அத்தகைய 60 நோயாளிகள் தங்கள் தாதிமை இல்லத்திற்கான கட்டணத்தையும் மற்ற கட்டணங்களையும் செலுத்த வழக்கறிஞர்கள், சமூக ஊழியர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளனர்.
உடற்குறையுள்ளோருக்கு அறக்கட்டளை சேவைகளை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ள ஒரே லாப நோக்கமற்ற அமைப்பு, ‘எஸ்என்டிசி’.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அதற்கு ஆதரவு வழங்குகிறது. அத்தகைய நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் என்று தாம் எதிர்பார்ப்பதாக திருவாட்டி டான் கூறினார். ‘நிபுணத்துவ சேவை வழங்குநர்கள் மற்றும் கொடையாளிகள்’ திட்டத்தின் தொடர்பில் பொதுமக்கள், சமூக சேவைத் துறையினர் இடையில் அதிகரிக்கும் விழிப்புணர்வே அதற்குக் காரணம் என்றார் அவர்.
அந்தத் திட்டத்தின்கீழ், மனநலப் பிரச்சினை அல்லாத ஒருவர், தமக்கு மனநலக் குறைபாடு, உதாரணமாக மறதி நோய் ஏற்பட்டால், தம் சார்பில் முடிவுகளை எடுக்க நிபுணர் ஒருவரை நியமிக்கலாம்.
நீண்டகால அதிகாரப் பத்திரம் (Lasting Power of Attorney) மூலம் அந்த நியமனம் உறுதி செய்யப்படும்.
ஒருவர் மனநல ஆற்றலை இழப்பதற்கு முன்னரே நீண்டகால அதிகாரப் பத்திரம் செய்யப்படாவிட்டால், அவர் சார்பாக முடிவுகளை எடுக்க நீதிமன்றங்கள் நிபுணர் ஒருவரை நியமிக்கலாம்.