பெண்கள் விடுதி ஒன்றின் கழிவறைகளில் இருந்த புகையைக் கண்டறியும் கருவிகளைக் கண்காணிப்புக் கருவியாக மாற்றியமைத்ததாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவர்மீது செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.
தன் தங்கையின் நுழைவு அட்டையைப் பயன்படுத்தி 27 வயதான இங் யொங் குவான் அந்த விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அனுமதியின்றி ஓர் இடத்திற்குள் அத்துமீறி நுழைவது, காணொளிகளில் இடம்பெற்றவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை வைத்திருப்பது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை இங் ஒப்புக்கொண்டார்.
இந்தக் குற்றத்தை 2019ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் புரிந்ததாக கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஐந்து பெண்கள் குளிப்பதைக் காட்டும் 20க்கும் மேற்பட்ட காணொளிகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.