ஜூரோங் வட்டாரப் பாதை, சாங்கி நியூவாட்டர் ஆலை 3 ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரரான ஷாங்காய் டன்னல் இன்ஜினியரிங் நிறுவனம் தொடர்பான இணையப் பாதுகாப்புச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனது மின்னிலக்க அமைப்புகளுக்கான அந்த நிறுவனத்தின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) தெரிவித்தது.
“தற்போது நடைபெற்று வரும் எம்ஆர்டி பாதையின் கட்டுமானத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை” என்று ஆணையம் கூறியது.
இதில் சம்பந்தப்பட்ட தரவுகளின் தன்மை குறித்து அது விரிவாக விளக்கவில்லை.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கும், சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக ஆணையம் கூறியது.
சாங்கி நியூவாட்டர் ஆலை 3 தொடர்பான எந்த முக்கிய தரவுகளும் பாதிக்கப்படவில்லை என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளது.
“பாதிக்கப்பட்ட தரவுகளில் திட்டத்தின் ஏலக்குத்தகை ஆவணங்கள் மட்டுமே இருந்தன. அவை அரசாங்கக் கொள்முதல் தளமான GeBIZல் பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடியவை” என்று கழகம் தெரிவித்தது.

