புலாவ் உபின் கடற்பகுதி அருகே எண்ணெய்ப் படலங்கள்

புலாவ் உபின் கடற்பகுதி அருகே எண்ணெய்ப் படலங்கள்

1 mins read
0ed59166-3dc1-4c1a-9a19-85567e9ba6c8
எண்ணெய் படிந்த மீன்வலைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. - படம்: டேனியல் டே

கிழக்கு ஜோகூர் நீரிணை அருகே உள்ள மூன்று உள்ளூர் மீன்பண்ணைகள், அவற்றை ஒட்டிய கடற்பகுதியில் எண்ணெய்ப் படலங்கள் காணப்படுவதாக வெள்ளிக்கிழமை (ஜூலை 17) தெரிவித்தன.

இதுதொடர்பாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு சனிக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.

“மூன்று மீன்பண்ணைகளுடனும் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம். எண்ணெய்ப் படலங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. பண்ணைகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்,” என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

“நிலைமையைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இதுவரை உணவுப் பாதுகாப்பு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்றும் அமைப்பு கூறியது.

“வெள்ளிக்கிழமை காலை 7 மணிவாக்கில் கிழக்கு ஜோகூர் நீரிணையில் அமைந்துள்ள புலாவ் உபின் அருகே புலாவ் கேத்தாம் பகுதியில் எண்ணெய்ப் படலங்கள் தென்பட்டன,” என்று சிங்கப்பூர் மீன்பண்ணைச் சங்கத்தின் தலைவர் டேனியல் டே கூறினார்.

எண்ணெய்ப் படலங்கள் மிதந்தபோது, மீன்கள் ஆழமான பகுதியில், அதாவது கூண்டுவலைகளுக்குள் இருந்தததால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எண்ணெய் படிந்த வலைகள் சுத்தம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்