ஈஸ்ட் கோஸ்ட் பூங்காக் கரையில் திட்டுத்திட்டாக எண்ணெய் தென்பட்டதாக ஜூன் 27ஆம் தேதி அங்கு சென்றிருந்தோர் கூறியுள்ளனர்.
தேசிய சுற்றுப்புற அமைப்பைச் சேர்ந்த குழு ஒன்று அப்பகுதியைச் சுத்தம் செய்துகொண்டிருந்ததாகவும் எண்ணெய்த் திட்டுகள் குறைவாகக் காணப்பட்டதாகவும் அங்கு சென்றிருந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா எண்ணெய்த் திட்டுகளால் அதிகம் பாதிக்கப்படாவிட்டாலும் அவ்விடத்தில் காணப்பட்ட பெரிய நண்டு ஒன்றின் ஊதா நிறக் கால்களில் ‘தார்’ ஒட்டியிருந்ததாக அந்த இயற்கை ஆர்வலர் குறிப்பிட்டார். மீன் ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, எண்ணெய்த் திட்டுகளால் உயிர்வாயு அளவு பாதிக்கப்படலாம் என்றும் அதனால் கடல் உயிரினங்கள் மாண்டுபோகக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து மேல்விவரம் அறிய, தேசிய சுற்றுப்புற அமைப்பு, தேசிய பூங்காக் கழகம், கடல்துறை, துறைமுக ஆணையம் ஆகியவற்றை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.