சிங்கப்பூரின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஓங் பெங் செங் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வியாழக்கிழமை ஜூலை 3ஆம் தேதி ஒப்புக்கொள்ள இருந்தார்.
இந்நிலையில், அவருடைய வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஓங் பெங் செங்கின் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் ஜூலை 8ஆம் தேதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
அத்துடன், திரு ஓங்கின் வழக்கு விசாரணையும் மறுதேதி குறிப்பிடப்படும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த நீதிமன்ற பேச்சாளர் ஒருவர், அரசுத் தரப்பு, தற்காப்பு தரப்பையும் சேர்ந்தவர்கள் விசாரணை ஒத்திவைக்கப்பட வேண்டுமென மனுச் செய்ததாகக் கூறினார். இதன் தொடர்பில் அவர்கள் எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க விரும்புவதாக அவர் விளக்கினார்.
திரு ஓங் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளும் விதமாக வழக்கு விசாரணை பின்னொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலக பேச்சாளர் தெரிவித்தார்.
திரு ஓங்குக்கு வயது 79. அவர் மீது பொதுச் சேவை ஊழியர் பரிசுப் பொருள்கள் பெற துணைபோனதாகவும் நீதித் துறை தனது கடமையைச் செய்ய விடாமல் நீதித்துறைக்கு இடையூறு செய்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.