அந்தரங்கப் படங்கள், பாலியல் ரீதியான காணொளி அழைப்புகள் போன்றவற்றுடன் தொடர்புடைய இணைய மிரட்டல் மோசடிகள் (cyber extortion scams) அதிகரித்து வருவது குறித்துக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
2026 ஆகஸ்ட் முதல் குறைந்தது 52 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன, இவற்றில் குறைந்தது 134,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் செப்டம்பர் 3ல் காவல்துறை வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களில், காதல் செயலிகள் அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவே பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் அணுகப்படுகிறார்கள்.
தொடர்பை ஏற்படுத்திய பிறகு, மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களைக் குறுஞ்செய்திச் செயலிகளில் உரையாடலைத் தொடர சம்மதிக்க வைப்பார்கள்.
பாலியல் ரீதியான வீடியோ அழைப்புகளில் பங்கேற்கவோ அல்லது அந்தரங்கப் புகைப்படங்களைப் பகிரவோ பாதிக்கப்பட்டவர்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். அவை மோசடிக்காரர்களால் ரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன அல்லது சேமிக்கப்படுகின்றன.
பின்னர், பணம் கொடுக்காவிட்டால் அந்தப் படங்களையும் பதிவுகளையும் வெளியிடப்போவதாகவும் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது சமூக ஊடகத் தொடர்புகளுக்கு அனுப்பப் போவதாகவும் மோசடிக்காரர்கள் மிரட்டுவார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்திய பிறகும் இந்த மிரட்டல் பறிமுதல் தொடர்ந்து நடப்பதாகக் காவல்துறை கூறியுள்ளது.
இணையத்தில் அண்மையில் சந்தித்த நபர்களுடன் பாலியல் ரீதியான காணொளி அழைப்புகளில் பங்கேற்பதையோ அல்லது புகைப்படங்களைப் பகிர்வதையோ தவிர்க்கும்படி பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
‘டேட்டிங்’ செயலிகள், சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தித் தளங்கள் ஆகியவற்றின்வழி அறிமுகமில்லாதவர்களுடன் பழகும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இணையத்தில் தங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் தங்களின் சமூக ஊடகக் கணக்குகளை எளிதில் ஊடுருவ முடியாத வகையில்அமைத்துக்கொள்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகைய மோசடிகளை எதிர்கொண்டால், பாதிக்கப்பட்டவர்கள் மோசடிக்காரர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கவோ அல்லது எவ்விதப் பணமும் செலுத்தவோ கூடாது.


