ஜூரோங் வெஸ்ட்டில் முதல் சைக்கிள் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (பிப்ரவரி 15) அது அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
நடையர்களும் சைக்கிளோட்டிகளும் பயன்படுத்தக்கூடிய வகையிலான இந்தப் பாலத்தால் ஜூரோங் புத்தாக்க வட்டாரத்திற்குச் செல்வதற்கான பயண நேரம் வெகுவாகக் குறையும்.
110 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மேம்பாலம், புளோக் 864ஏ ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81க்கு வெகு அருகே அமைந்துள்ளது.
தீவு விரைவுச் சாலையைக் கடக்க சைக்கிளோட்டிகள் இந்த மேம்பாலத்தில் செல்ல முடியும்.
இது, ஜூரோங் புத்தாக்க வட்டாரத்திற்கு நடந்து செல்லும் நேரத்தை 35 நிமிடம் குறைக்கும்.
இதனால் ஜூரோங் வெஸ்ட்டில் வசிக்கும் 63,000 பேர் பலனடைவர்.
ஜூரோங் புத்தாக்க மாவட்டம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கிளீன்டெக் பூங்காவில் வரவிருக்கும் எம்ஆர்டி நிலையம் போன்ற இடங்களுக்குப் பாலத்தின் வழியாக அவர்கள் எளிதில் செல்ல முடியும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பாலத்தை தேசிய வளர்ச்சி அமைச்சரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ்மண்ட் லீ, அந்தக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மற்றொருவரான ஆங் வெய் நெங், ஜேடிசி தலைமை நிர்வாகி டான் பூன் காய் ஆகியோர் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
புதிய மேம்பாலத்தின் அதிகாரபூர்வத் திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை அந்த வட்டாரக் குடியிருப்பாளர்கள் 1,000க்கும் மேற்பட்டோர் அதில் நடந்து சென்றனர் அல்லது சைக்கிளோட்டிச் சென்றனர்.