ஆர்ச்சர்ட் ரோட்டில் நடந்த சண்டையில் கலவரத்தில் ஈடுபட்டதற்காக ஆடவருக்கு பிரம்படிகளுடன் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2023 ஆகஸ்ட் 20ஆம் தேதி நடந்த கைகலப்பில் கும்பல் உறுப்பினரான சிஜேஷ் அசோகன், முகம்மது இஸ்ரத் முகம்மது இஸ்மாயிலை, 29, மூன்று சம்பவங்களில் குத்தி எட்டி உதைத்தார்.
கான்கார்ட் ஹோட்டல், கடைத்தொகுதியில் உள்ள ரூமர்ஸ் எனும் கேளிக்கை விடுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.
அஸ்வின்பச்சன் பிள்ளை சுகுமாரன் என்று அடையாளம் காணப்பட்ட கலவரக் கும்பலைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர், இஸ்ரத் கைவிட்ட கத்தியை எடுத்து அவரைப் பலமுறை குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த இஸ்ரத் அவசர மருத்துவ வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அதிகாலை 7 மணியளவில் அவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில் புதன்கிழமை (மே 7) அன்று சிங்கப்பூரரான சிஜேஷுக்கு கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வின், 30, மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தக் கலவரத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கு ஏற்கெனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் ஸ்ரீதரன் இளங்கோவன், மனோஜ் குமார் வேலையநாதன் ஆகியோரும் அடங்குவர். ‘கிளப் ரூமர்ஸ்’ஸில் பணியாற்றிய சுர்ஃபாக்கர் முஸ்லி, முகம்மது ஸக்காரி டேனியல் முகம்மது அஸார், முகம்மது ஷாருல்நிஸாம் உஸ்மான் உள்ளிட்டோர் முன்னதாக நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டனர்.