வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் ஒருவருக்கு மாண்டரின் மொழி பேசத் தெரியாத நிலையிலும், அவர் நன்றாக மாண்டரின் பேசுவார் எனத் தவறான தகவல் தந்த பணிப்பெண் முகவை, படுத்த படுக்கையாக இருக்கும் முதியவர் ஒருவருக்கு $1,558 இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறு உரிமைக்கோரிக்கைகள் தீர்ப்பாயத்தின் விசாரணைக்குப் பிறகு, பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தகம்) சட்டத்தின்கீழ் அந்த முகவையின் செயல்பாடுகள் முறையற்ற வணிக நடவடிக்கையாகும் என்று தீர்ப்பாய நீதிபதி தீர்ப்பளித்தார்.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) வெளியிடப்பட்ட தீர்ப்பின் எழுத்துபூர்வ விவரங்களில், பாதிக்கப்பட்ட முதியவர், சம்பந்தப்பட்ட பணிப்பெண் முகவை, அதன் பிரதிநிதியின் அடையாளங்கள் மறைக்கப்பட்டன.
அந்த முகவை, சிங்கப்பூர் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட ஒரு “பெரிய வெளிநாட்டு பணிப்பெண் முகவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்கவாதம், நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருக்கும் அந்த முதியவர், பெரும்பாலும் மாண்டரின் மொழியிலேயே பேசுவார். அவருக்கு ஆங்கிலம் மிகக் குறைவாகவே புரியும். எனவே, தம்மோடு உரையாடக்கூடிய ஒரு பணிப்பெண் தமக்குத் தேவை என்று அவர் கோரியிருந்தார்.
அந்தப் பணிப்பெண்ணின் மொழித்திறன் குறித்து முகவை அளித்த விளக்கம் முற்றிலும் தவறானது என்றும் தம்மைக் கவனித்துக்கொள்ள பணியமர்த்தப்பட்டப் பணிப்பெண்ணுடன் அந்த முதியவரால் எந்தவொரு தொடர்பும்கொள்ள முடியாமல் போனது எனவும் தீர்ப்பாய நீதிபதி லியோன் அப்ரஹாம் டான் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

